அவள்

, , 1 comment
அவளிடம் நான் அவ்வளவாக பேசியதில்லை. நான் தனிமையில் இருக்கும்போது அவளுடன் பேச ஓராயிரம் வார்த்தைகள் ஒத்திகை பார்த்ததுண்டு. ஆனால், அவளுடன் பேச விழையும் தருணங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் உதிர்க்க என் நா மறுக்கின்றன. அதற்கு காரணம், என்னையே அறியாமல் நான் கொண்ட நாணமா இல்லை அவள் கண்களில் நான் கண்ட பானமா என்பது எனக்கே புதிர் தான். தூக்கக் கலக்கத்திலோ ஒரு வித கிறக்கத்திலோ நான் அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவளுடன் பேசிட, அவள் மேல் நான் கொண்ட ஆசைகளை கவிதையாய் பாடிட ஓர் அசட்டுத் தைரியம் என்னை வந்து சேரும். ஆனால், அடுத்த நாளே அவளைப் பார்க்கும்போது மீண்டும் ஓர் முறை கோழையாகிறேன்.

அவள் இதழோரப் புன்னகை அவ்வப்போது தலைநீட்டி கண் சிமிட்டும். அது எனக்கானதாய் இருக்காதா என்கிற அங்கலாய்ப்பு எப்போதும் எனக்குண்டு. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த சிரிப்பு இரட்டிப்பாகும். அதைப் பார்த்து என்னையே அறியாமல் நானும் சிரித்துக் கொண்டிருப்பேன். அந்த சிரிப்பிற்கு காரணம் கேட்டால் சமாளிக்க முடியாமல் அசடு வழிவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். அப்படியொரு நிலைக்கு என்னை அடிக்கடி ஆளாக்குவதில் அவள் படுசுட்டி.


அவள் பார்க்கும் திசையில் நான் இருந்துவிட்டால் போதும், அவளைக் கவர்ந்து விட வேண்டுமென்று என் இயல்பை மீறி நான் செய்யும் கோமாளித்தனங்கள் பல. அவள் கண் விழி உருளும் சமயங்களில் நானும் உருள முற்படுகிறேன், அவள் விழிகளின் ஒளி என் மேல் நிகழ்ந்து கொண்டே இருக்க.


அவள் துப்பட்டாவும் என் சட்டையும் எப்போதாவது ஒரே வண்ணத்தில் சந்தித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றல் ஒன்று எங்களை சேர்க்க போராடி வருவதாய் நினைத்துக் கொள்வேன். அவள் தன் தோழிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அரை வினாடிக்கொரு முறை முகபாவனைகளை மாற்றிக் கொண்டே இருப்பாள். அவளை விட அப்படி என்ன சுவாரஸ்யம் அந்த உரையாடலில் இருந்து விட போகின்றது என்று நான் வியந்ததுண்டு. இருந்தும் அவளைத் தொடர்ந்து கவனிக்க நான் அச்சப்படுகிறேன். அவள் ஒவ்வொரு முகபாவனையும் என் உடல் பாகங்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கின்றன.


யாரும் கவனிக்கவில்லையென நினைத்து அவள் தன்னிலை மறந்து நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டிருப்பாள். ஒரு மழலையின் உடல்மொழி அவளிடத்தில் தெறித்துக் கொண்டிருக்கும். பஞ்சத்தில் அடிபட்ட பாமரனாய் அவளையே நான் வெறித்துக் கொண்டிருப்பேன், அவள் சிந்தவிடும் சிதறல்களேனும் எனக்கு சொந்தமாகுமா என்கிற ஏக்கத்தில்.


சுவாரஸ்யம் இல்லாத வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்போதெல்லாம் அவள் முகத்தை ஒரு மாதிரி தூக்கி வைத்துக் கொள்வாள். அதுவும் ஒரு அழகு தான் என்று இலக்கணத்தை மாற்றியமைத்தாள். அனைவரும் தாங்கி நிற்கும் எதார்த்தம் கூட, அவளிடம் சேர்கையில் கவிதையாகிறது.


அவள் யாருடனாவது ஐந்து நிமிடங்களுக்கு மேல் கைப்பேசியில் உரையாடினால் என் மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். ஒரு வித பொறாமை துளிர்விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்து விடுவேன். நேரில் பேச முடியாமல் திருட்டுத்தனமாய் அவள் முகப்புத்தகப் பக்கத்தை நோட்டமிடும் ஒரு தொடை நடுங்கியின் செய்கை வேறென்னவாக இருந்து விட முடியும்.


அவளை நான் இவ்வளவு ரசித்தபோதும், விரும்பியபோதும் அவளுடனான ஒரு இடைவெளியையே விரும்புகிறேன். அவளுடன் நெருங்கி அவளைப் புரிந்துகொள்ள முயல்கையில் உண்மையில் அவள் நான் விரும்பிய அவள் இல்லை என்கிற ஏமாற்றத்தை விட, தொலைவில் இருப்பினும் நான் ரசித்த அவளாகவே வாழ்ந்துவிட்டு போகட்டும். அவள் வாழ்க்கையில் அவளே படிக்காத ஒரு அத்தியாயமாய் இருப்பதும் ஒரு போதை தானே...!

1 comment: