கடவுள் இருக்கிறாரா?

, , 1 comment

"கடவுள் இருக்கிறாரா?"


இக்கேள்வியை நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில் கேட்டிருந்தால், கண்டிப்பாக இருக்கிறார் என்றிருப்பேன். இதே சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் இல்லவே இல்லை என்று சண்டைக்கு கூட வந்திருப்பேன். 'சரி, இப்போ என்ன தான் டா சொல்ற?' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. அதை தெரிந்து கொள்ள நாம் சில வருடங்கள் பின் நோக்கியும், மைசூரை நோக்கியும் செல்ல வேண்டும். குத்துமதிப்பாக 5 ஆண்டுகள்.


என் தங்கை கல்லூரி முடிந்த கையுடன் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர மைசூர் வர சொல்லியிருந்தார்கள். குடும்பமாக ஒரு 6-7 பேர் வாடகைக் கார் வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து சென்றோம். ஆபிஸில் சேர எதற்கு இத்தனைப் பேர் என்ற ஒரு கேள்வி வரலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செல்லப் பிள்ளையான என் தங்கை வீட்டில் இருந்து வெளியே சென்று தங்க ஆயத்தமாகும் முதல் பயணம். அந்த மென்சோகம் பயணம் தொடங்கும் முன்பே தொடங்கி விட்டது. அது கூடக்கூட அங்கே செல்லும் ஆட்களின் எண்ணிக்கையும் கூடியது. இவ்வளவு ஏன் "இவங்க ரெண்டு பேர்த்தயும் ஸ்கூலோட நிறுத்திரலாம். படிக்க வெச்சு என்ன ஆகப் போகுது?" என்று சொன்ன தாத்தா கூட முதல் ஆளாக ஏறிக் கொண்டார்.


எங்கள் வீட்டில் அனைவரும் அதீத பக்திமான்கள். எவ்வளவு என்றால்...


சும்மா இருக்கோமா? கோவிலுக்கு போகலாம்.


சும்மா இருக்க முடியலையா? அப்பவும் கோவிலுக்கு போகலாம்.


அவ்வளவு. 


அதனாலேயே எனக்கு ஒரு ஒவ்வாமை இந்த பக்தியுடன். 


இவர்களுடன் எந்த பாதையில் எப்போது பயணித்தாலும் முதல் இலக்கு ஒரு கோவிலாக தான் இருக்கும். அப்படித்தான் மைசூர் செல்லும் வழியில் ஒரு கோவிலை சென்றடைந்தோம். அங்கே தரிசனம் முடித்து விட்டு தான் மறுவேலை என்று காலை 5 மணிக்கே ஆரம்பித்து விட்டார்கள். "அடேய், அந்த ஆபிஸ்ல போய் நேரத்துக்கு சேந்தா தான்  அவளுக்கே வேலை!" என்பதாக இருந்தது என் மைண்ட் வாய்ஸ்.


"கூட்டம் கம்மியா தான் இருக்கு, எப்டியும் ஈஸியா 2 மணி நேரத்துல சாமி பாத்தரலாம்" என்று அவர்கள் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்த போதே முடிவு செய்து விட்டேன். நான் அவர்களுடன் செல்லப் போவதில்லை என்று. நான் தீவிர கடவுள் மறுப்பில் இருந்த காலம் அது.


"நா வரல.. நீங்க போயிட்டு வாங்க.."


"வரலையா.. எங்க போக போற?"


"எங்கயும் போகல.. இங்க அப்டியே சும்மா போட்டோ எடுத்துட்டு இருக்கேன்." நான் புதிதாக அப்போது தான் ஒரு கேமரா வாங்கியிருந்தேன்.


"நீ அதுக்கா வந்த.. உள்ள போயிடு வரலாம் வா.."


"நீங்க இதுக்கா வந்தீங்க? ஆபிஸ் போலாம் வாங்க.."


இது திருந்தாது என்பது போல பார்த்து விட்டு அனைவரும் கோவிலுக்குள் சென்றனர். நான் என் கேமராவை தூக்கிக் கொண்டேன்.



ஒரு அரை மணி நேரம் கோவிலை சுற்றி சுற்றி வளைத்து வளைத்து எடுத்திருப்பேன். அனைத்து புகைப்படங்களும் ஒரே மாதிரி தான் இருந்தன. சரி, நம்ம கிரியேட்டிவிட்டி அவ்வளவு தான் போல என்று டீயை வாங்கி கொண்டு ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தேன். அதுவும் இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இன்னொரு டீ வாங்கிரலாமா என்று வெறும் கப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அருகில் நிழலாடியது.


ஒரு நடுத்தர வயதுள்ள நபர் கொஞ்சம் தள்ளி அதே பெஞ்சில் அமர்ந்தார். கண்ணை மூடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அவர் லிப் மூவ்மெண்டை வைத்து என்ன சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரை உன்னிப்பாக கவனித்தேன். அதை எப்படியோ உணர்ந்த அவர் தவம் களைந்த முனியைப் போல் என்னைப் பார்த்தார். அந்த சங்கடத்தை மறைக்க சிரித்து வைத்தேன். அவர் முகம் கனிவாக மாறியது.


"எந்த ஊர்?" கன்னடமும் ஆங்கிலமும் கலந்து வந்தது அந்த கேள்வி.


"திருப்பூர்"


"போட்டோக்ராபரா? போட்டோ எடுக்க வந்துருக்கீங்களா?"


"இல்ல.. வீட்ல இருந்து வந்துருக்காங்க.. கோவிலுக்கு உள்ள போயிருக்காங்க..." என்றேன் அதே கன்னடமும் ஆங்கிலமும் கலந்து. என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இது. ஒரு மொழி ஒழுங்காக தெரியவில்லை என்றால் அது தெரியாது என்று சொல்லி விட என் ஈகோ என்றும் ஒத்துழைத்தது இல்லை. அதை தவறாக பேசி அவர்களே புரிந்து கொள்ளும் வரை நான் விட்டதே இல்லை. அவர் கெட்டிக்காரர் அந்த ஒரு கேள்வியிலேயே புரிந்து கொண்டார். ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் ஆங்கிலம் அவ்வளவு சரளமில்லை. ஆனால், என் கன்னடம் அளவிற்கு மோசமில்லை.


"ஓ.. அவளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்களா?"


"ஆமா..." 


"நாங்களும் தூரத்துல இருந்து தான் வந்துருக்கோம். நார்த் கர்நாடகால இருந்து.." அவர் சொன்ன ஊர் பெயரை சத்தியமாக மறந்து விட்டேன்.


"ஓ.." இப்படியாக இரண்டு மூன்று ஓ போட்டு விட்டு நகர்ந்து விடலாம் என்று தான் யோசித்திருந்தேன். அப்போது தான் அவர் தன் பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தார். உண்மையில் மிக அசௌகர்யத்துடன் தான் கேட்க ஆரம்பித்தேன்.


இன்னொரு முக்கியமான விஷயம். பொதுவாக ஆண்கள் அதிகமாக எதையும் பகிரமாட்டார்கள், திறந்த புத்தகமாக இருக்கமாட்டார்கள் என்றொரு கருத்துண்டு. அதற்கு ஒரு நேரெதிர் தியரி நான் வைத்திருக்கிறேன். தெரியாத ஒரு ஆணிடம் நீங்கள் சுமார் 20 நிமிடம் பேச்சு கொடுக்க நேரிட்டால் அவர்களின் வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்வை அல்லது பிரச்னையை உங்களிடம் கூறியிருப்பார்கள். ஆண்கள் பொதுவாக தனிமையானவர்கள். தங்களுக்குள் இருப்பவற்றை தனிமை என்னும் கயிறைக் கொண்டு இறுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அந்த கயிற்றின் இறுக்கத்தை தளர்த்த ஒரு கால் மணி நேர உரையாடல் போதுமானதாக இருக்கிறது. நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளவே போவதில்லை என்கிற ஒரு தைரியம் கூட காரணமாக இருக்கலாம். இதற்கு நாம் பார்க்க போகும் இந்த உரையாடல் மட்டும் உதாரணம் அல்ல. இப்படித்தான் நான் ஒரு ஆட்டோ டிரைவருடன் அரை மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. அந்த நேரத்துக்குள் அவர் கள்ள காதல் கதையை சொல்லிவிட்டார். கள்ள காதல் என்றவுடன் உங்கள் புருவம் உயர்வதை உணர முடிகிறது. ஆனால், அதை இன்னொரு நாள் சொல்கிறேன். நம் கதைக்கு வருவோம்.


அதற்கு முன் ஒரு எச்சரிக்கை. என் தியரியை வைத்துக் கொண்டு யாரிடமும் எதையும் உளறி வைக்காதீர்கள். அனைவரும் என்னைப் போல நல்லவனாக இருக்க போவதில்லை(?!). ஸாரி, நான் பார்த்தவர்கள் போல.



"நானும் என் பொண்டாட்டியும் தான் வந்துருக்கோம்." என்றார் சற்றே தோய்ந்த குரலில்.


"ஓ.."


"எங்களுக்கு ரொம்ப நாளா கொழந்தை இல்ல... அப்படியா?"


"அப்படியா?" நான் வற்புறுத்தி வரவழைத்த ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்.


"ஆமா... எங்க ஊரு கிளைமேட்டுக்கு எல்லாருக்கும் லேட்டா தான் பொறக்கும்.."


`இவ்வளவு சயின்ஸ் பேசற ஆள் கொழந்த பொறக்கலனு ஏன் கோவிலுக்கு வரான்` என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே "உங்க ஊர்ல எல்லாம் சீக்கிரம் பொறந்துரும் ல?" என்று கேட்டார்.


இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. "ஆமா.. அப்படி தான் இருக்கும்.  சில பேருக்கு சீக்கிரம் பொறக்கும், சிலருக்கு லேட் ஆகும்" என்று மேம்போக்காக எதையோ உளறி வைத்தேன். அவரை சோர்வடைய வைக்கும்படி எதையும் சொல்லி விடக் கூடாது என்பது மட்டும் என் பின்மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.


"ஓ.. சரி.. எங்களுக்கும் இவ்வளவு லேட்டா ஆகும்னு நெனைக்கல. எல்லா டாக்டரையும் பாத்தாச்சு எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல.எனக் ஊருல நெறய பேரு இந்த கோவில் ரொம்ப சக்தி வாய்ந்ததுனு சொன்னாங்க. அதான் இந்த கோயிலுக்கு வந்துருக்கோம்."


"சரிங்க.."


"நீங்க அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்க.. அப்போ இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது தானே? எங்களுக்கு கொழந்த பொறந்துரும் ல?" என்றார்  ஒரு வித ஆவலுடன்.


எனக்கு சில நிமிடங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பொதுவாக இப்படியான ஒரு கேள்வி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் தொடுக்கப்பட்டிருந்தால் 'அது எப்படி கோயிலுக்கு போனா எல்லாம் சரி ஆகும்?' என்று விதண்டாவாதமாக ஏதாவது கேட்டிருப்பேன். எனக்கு கடவுள் சார்ந்து இருக்கும் மக்களின் மேல் கோபமே 'நான் எதும் பண்ணலைனாலும் கடவுள் பாத்துப்பார், நான் எந்த தப்பு பண்ணுனாலும் கடவுள் பாத்துப்பார்' என்கிற போக்கு தான். அதை வைத்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்திக் கொள்வதும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கடவுள் வியாபாரமாக்கப்பட்டதும் அரசியலாக்கப்பட்டதும் அதை விட வேதனைக்குரியது. ஆனால், இங்கே ஒருவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆசையான ஒன்றிற்காக அலைந்து திரிந்து கடைசியில் நம்பிக்கையை மட்டுமே வைத்திருக்கும்போது. அந்த நம்பிக்கை கடவுளாக இருப்பதில் தவறில்லை என்றே பட்டது. 


"ஆமா, ரொம்ப சக்தி வாய்ந்த சாமின்னு தான் எங்க வீட்ல எல்லாரும் வந்துருக்காங்க.." அவர் முகத்தில் அப்படியொரு பிரகாசம். "உங்களுக்கு கண்டிப்பா சீக்கிரம் கொழந்தை பொறக்கும்.." என்றேன் சிரித்த முகத்தோடு. அவர் முகத்திலும் அதே சிரிப்பு.



இந்த சம்பவம்  முடிந்த சிறிது நேரத்தில் எனக்கு தோன்றியது. 'அடடா, நாம நம்பாத ஒரு விஷயத்த நம்பற மாரி சொல்லிட்டோமே' என்று தான். ஆனால், அவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க இப்படி செய்தது திருப்தியாக தான் இருந்தது. அதே சமயம், ஒரு தெரியாத நபர் என்பதால் நின்று யோசித்த நான், நெருக்கமானவர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக உதாசீனப்படுத்தி இருப்பேன்.நாம் எடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்கு இடையில் நம்பிக்கைகளுக்கு இடமில்லை போலும்.


இதெல்லாம் சரி, கடவுள் இருக்காரா இல்லையானு சொல்லு என்கிறீர்களா?



இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. கடவுள் ஒரு நம்பிக்கை கொடுப்பவர் தான். இந்த கதையில் நம்பிக்கை கொடுத்த நான் தான் கடவுள் - அஹம் ப்ரம்மாஸ்மி!

1 comment:

  1. 💯சரி. நாம் வழிபடும் கடவுள் என்பது நம்பிக்கையாகும், மனத்திருப்திக்கும் தான். உண்மையில் கடவுள் என்பது இயற்கையே🌍...

    ReplyDelete