பெண்களைப் பற்றிய படம் அல்லது பெண்களை சுற்றிய படம்  என்றாலே நம்மூரில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விடலாம். ஜோதிகா நடித்தால் ஒரு குடும்பப் பெண்ணின் போராட்டம், நயன்தாரா நடித்தால் திகில் நிறைந்த பேயாட்டம், மற்ற மசாலா படங்களில் வரும் நாயகிகளுக்கு காதலினால் வரும் ஆர்ப்பாட்டம். இவ்வளவு தான் நம் சினிமா. இதையும் தாண்டி சில படங்கள் ஸ்டீரியோடைப்புகளை உடைத்துவிட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், எண்ணிக்கை என்று பார்த்தால் சொச்சம் தான். போராட்டம், பயம், காதல் இதைத் தாண்டி பெண்களின் உணர்ச்சிகளை திரையில் பார்க்க முடியாதா என நான் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் நான் பார்த்த சீரிஸ் தான் 'ஆரஞ்ச் இஸ் தி நியூ ப்ளாக்'. (Orange is the New Black)



பிரெண்ட்ஸ் சீரிஸ் அளவிற்கு இது பிரபலமான சீரிஸ் இல்லை தான். ஆனால், ப்ரெண்ட்ஸில் பகடி செய்யப்பட்ட சில உறவுகளின் ஆழம் இதில் உணர்த்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, லெஸ்பியன்/கேய் உறவுகளை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பகடி செய்திருப்பார்கள் ப்ரெண்ட்ஸ் சீரிஸில். ஆனால், இதில் நாம் பார்க்கும் மைய கதாபாத்திரமே ஒரு லெஸ்பியன். அங்கேயே ஆரம்பிக்கிறது இந்த சீரிஸின் சுவாரஸ்யம்.

லெஸ்பியன் என்றாலே இரு பெண்களுக்கு இடையேயான புணர்ச்சி என்கிற அளவில் தான் நம் புரிதல் உள்ளது. ஆனால், காதல், ஊடல் , கண்ணீர் அதையும் தாண்டி வெளிப்படும் துரோகம் என அனைத்தையும் பைப்பர் வழியே நமக்கு கடத்தியிருக்கிறார்கள்.  பைப்பர் தன் காதலியால் ஒரு போதைப் பொருள் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு சிறைக்குள் வரும் பெண். அவள் தன் லெஸ்பியன் வாழ்வை மறந்து ஒருவனை மணமுடிக்க ஆயத்தமான நேரத்தில் தொடங்குகிறது நாம் பார்க்கும் திரைமொழியினோடு அவள் சிறைவாசம். அங்கேயே அவளை சிக்க வைத்த காதலியும் வந்து சேர்கிறாள். அதன் பிறகு அவர்களுக்குள்ளும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

பெண்கள் சிறை. நாம் அதிகம் பார்த்திராத ஒரு சூழல். பைப்பர் மைய கதாபாத்திரம் ஆனாலும் அவளே இல்லாத எபிசோடுகள் கூட உள்ளன. சுற்றிலும் அவ்வளவு வித விதமான கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி  கிளைக்கதைகள். சிலர் தெரிந்தே செய்த தவறுகள், சிலர் தெரியாமல் செய்த தவறுகள். அதனால் அவர்களுக்கு கிடைத்த சிறைவாசம். அதில் அவர்களுக்கு நிகழும் மனமாற்றம், மனக்குமுறல் என சீரிஸ் முழுக்க உணர்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன.

வெளியே தனி தனியாக தவறு செய்துவிட்டு சிறைக்குள் ஒன்று சேரும் அம்மா-மகள், சிறையில் தனிமையில் வாடுபவர்களை மகள்களாக எண்ணி உதவும் பெண், மூன்று பச்சிளங்குழந்தைகளை கொன்றுவிட்டு குற்ற உணர்ச்சியில் சுற்றும் ஒரு அம்மா, திருநங்கையாக தன் மனைவியின் உதவியுடன் மாறிய ஒரு கணவன், ஆண்களுக்கான முக்கியத்துவம் குறைகிறது என்பதாலேயே பெண்களுக்கு இடையேயான உறவுகளை வெறுக்கும் ஒரு காவலாளி, சிறைவாசிகளுக்கு ஏதாவது நல்லது செய்துவிடமாட்டோமா என்று ஏங்கும் ஒரு வார்டன் என கதாபாத்திரங்களுக்கிடையே முரண்களைப் புகுத்தி முன்னேறி செல்கிறது இந்த கதை.

இந்த சீரிஸ் பார்த்து நான் அறிந்து கொண்ட இன்னொரு விஷயம். இதுவரை இனவெறி சண்டையென்றால் அது கருப்பு வெள்ளை என ஒடுக்கப்பட்டும் ஒடுக்கியும் வாழ்பவர்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால், அதில் கருப்பு வெள்ளை தாண்டி ஸ்பானிஷ், ஏசியன் என இன்னும் பல இருப்பதை விரிவுப்படுத்தி விளக்கியிருந்தனர். அவர்களுக்கு இடையே தலைமைக்கான போட்டி அதற்காக நடக்கும் கடத்தல், கொலை என்பதும் இந்த சீரிஸின் சாராம்சம்.  சிறைவாசிகள் மட்டுமின்றி அங்கு வேலை செய்யும் காவலாளிகளின் மனவோட்டத்தையும் பதிவு செய்திருந்தது சிறப்பு. அவர்களின் வாழ்வு, வழி அது உந்தும் போராட்டம் என சரி தவறு தாண்டி ஒரு ஜட்ஜ் செய்ய முடியாத கண்ணோட்டத்தில் நம்மை செலுத்தும் இந்த சீரிஸ்.

6 சீசன்கள் பார்த்துவிட்டு, 7வது சீசனுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அது தான் கடைசி சீசன் என்பதால் என்ன புதுசாக சொல்லிவிட போகிறார்கள் என்று தான் இருந்தேன். ஆனால், அதில் அமெரிக்காவின் சமகால அரசியலை வெளிப்படையாக சாடியிருந்தது ஒரு அதிர்ச்சியான ஆச்சர்யம் தான். நாடு விட்டு நாடு சென்று அமெரிக்காவில் இருக்கும் மக்கள் நிராதரவாக நாடு கடத்தப்படுவதை அழுத்தமாக பதிவு செய்திருந்தனர். அதில் பிரியும் உறவுகளில் சில சீரிஸ் முடிந்த பின்பும் நம்முள் நீங்காமல் இருக்கும். அவர்கள் தன் ஜனாதிபதியையும் சாட தவறவில்லை. இது இப்படி இருக்க இந்து முன்னணி என்னும் ஒரு அமைப்பைப் பற்றி பேசியதால் சென்சார் தாண்ட முடியாமல் இருக்கும் ஜிப்ஸி என்னும் தமிழ் படத்தை எண்ணி நொந்து கொண்டே இதை எழுதி முடித்தேன்.