இரவு 9:30 மணி

யுவன் இசையைப் போன்ற எனெர்ஜியும், ஸ்ரீ காந்த் தேவா வின் இசையைப் போன்ற இரைச்சலும் ஒரு சேர நிறைந்த  பெங்களுரு பேருந்து நிலையத்தில் சத்யா தன் தோழியின் அண்ணன் அமுதனுடன் எலெக்ட்ரானிக் சிட்டி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அதற்கு போகும் வழியில் தான் சத்யாவின் ஹாஸ்டலும் கூட.

ஒரு தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த அமுதனை விருந்தோம்ப வேண்டிய சூழல் சத்யாவிற்கு, அதை அவனை சேலத்திற்கு பேருந்து ஏற்றி விடும் வரையில் கடமையாய் செய்து முடிக்க சபதம் ஏற்றிருந்தாள். அதற்காக ஹீரோயினை பத்திரமாக பஸ் ஏற்றி விடும் ஹீரோவாக தன்னை பாவித்துக்கொண்டு, தன்னை பற்றி தானே எண்ணி புளங்காகிதம் அடைந்து கொண்டிருந்தாள்.

திருமண வரவேற்பு முடிந்து மணமகன்- மணப்பெண் இருவரின் மேக்கப்புகளுமே கலைந்து போயிருக்கக் கூடிய அவ்வேளையிலும், மாலையில் தான் போட்ட மேக்கப் சிறிதளவும் சிதையாதவாறு பத்திரமாக பார்த்துக் கொண்டாள் சத்யா. அதற்கு உடந்தையாக அவள் பர்ஸில் குடிகொண்டிருந்த சீப்பும் கண்ணாடியும் ஒத்துழைத்தது. ஹோட்டல் கமிஷனுக்காக ஆள் புடிக்கக் காத்திருந்த ஆட்டோக்காரர்களும் இவளைப் பார்த்து கன்னடத்தில்  கூவ ஆரம்பித்தனர்.

"மேடம்... தங்க ஹோட்டல் வேணுமா ?" 

"ஆட்டோ , ஆட்டோ... ஒரு 20 ரூபா குடுங்க.. நல்ல ஹோட்டலா நா கூட்டிட்டு போறேன்... நீங்களா போனா ஏமாத்திருவாங்க ..."

என்று பல குரல்கள் இவளை ஒரு சுற்றுலா பயணியாக எண்ணி ஹோட்டலில் தங்க வைக்க ஓலமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால், எதையும் சட்டை செய்யாமல் எலெக்ட்ரானிக் சிட்டி பஸ் இருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

'அடேய்... எங்க ஆபீஸ்ல பேசற இங்கிலிஷே அரைகுறை, இதுல உங்க கன்னடம் வேறயா... சும்மா போங்கடா !' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள். மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்டாலும் தமிழில் கேட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில். இருக்கும் இடம் கர்நாடகம் அல்லவா!

ஒரு வழியாக அவள் தேடிக் கொண்டிருந்த பேருந்து கிளம்ப தயாராக இருந்தது மட்டுமல்லாமல் , இவர்கள் இருவரும் அமர இரு சீட்கள் தரும் அளவிற்கு கருணையும் கொண்டிருந்தது.  பேருந்தில் வேறு சீட் எதுவும் காலியாக இல்லை, ஒரு பெண் ஏறினாலும் சீட் பறி போகும் அபாயத்தில் அமுதன், எப்போது வேண்டுமானாலும் தூங்கி விழும் பரிதாபத்தில் சத்யா என்ற நிலையில் பேருந்து கிளம்பியது.

"எலெக்ட்ரானிக் சிட்டி போகவே 1 மணி நேரம் ஆகும். அப்புறம் நா பஸ் ஏறி , நீ திரும்ப ஹாஸ்டலுக்கு அரை மணி நேரம் நடந்து வரணும். உனக்கு ரொம்ப லேட் ஆயிரும் சத்யா..." என்றான் பரிச்சயமில்லாத பாஷைக்கிடையில்  படாத பாடு பட்டுக் கொண்டிருந்த அமுதன்.

"அரை மணி நேரம் எல்லாம் ஆகாது ணா... சீக்கிரம் போயிடுவேன் உங்கள பஸ் ஏத்தி விட்டுட்டு..." என்றாள் தன் ஹீரோயிசத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சத்யா.

"இல்ல பரவாயில்ல...  நா பஸ் ஏறிக்கறேன்.. நீ உங்க ஹாஸ்டல் ஸ்டாப்லயே  இறங்கிடு.."

"இல்ல ணா... ஒரு ஸ்டாப் தானே... உங்கள ஏத்தி விட்டுட்டு நா ஹாஸ்டல் போயிக்கறேன் " என்றாள் சக்திமானாக தன்னை நினைத்துக் கொண்ட சத்யா. அமுதனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

தனக்கு மனப்பாடமாக தெரிந்த கன்னட டயலாக்கில் டிக்கெட்டை எடுத்துவிட்டு ஜன்னலோரத்தில் தன் தலையை  சாய்த்தாள். தூக்கம் தூரத்தில் வருவது போல தோன்றியது. இருந்தாலும் தன் கண் மை அழிந்து விடக்கூடாதென்று கண்ணியமாக அதை துரத்திவிட்டாள்.

அப்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. நடுத்தர வயதில் இருவர் ஏறினர். ஒருவர் மாற்று திறனாளி , மிகவும் சிரமப்பட்டு தான் பேருந்தில் ஏறினார்.  சீட் இல்லாததால் ஒரு கம்பியைப் பார்த்து சாய்ந்து நின்று கொண்டார். ஹெட்போன்களிலும் மொபைல்களிலும் மூழ்கிப் போயிருந்த பயணிகளுக்கு இவரை கவனிக்க நேரம் இல்லாமல் தான் போனது.

எதார்த்தமாக அவரைப் பார்த்த சத்யா, தன் சீட்டை விட்டு உடனே எழுந்தாள். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன், உட்கார்ந்திருந்தால் தூங்கி விடுவேன் என்ற எண்ணமும் சேர்ந்து அவருக்கு சீட் கொடுக்க செய்தது. எந்த மொழியில் பேசுவது என புரியாமல் ஆங்கிலத்தில் ஒருவாறு பேசி அவரை உட்கார வைத்தாள். முதலில் மறுத்தாலும், அன்பு தொனித்த அவள் குரல் அவரை உட்கார வைத்தது. அவளுக்கு மனமார நன்றி கூறிக்கொண்டார்.

இவள் நின்ற சிறிது நேரத்தில் அமுதனும் இன்னொருவருக்கு இடத்தைக் கொடுத்து விட்டு நின்றுகொண்டான்.  இருவரும்  சுவாரஸ்யமற்ற விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே வந்தனர். சத்யா இடம் கொடுத்தவர் மட்டும் அவ்வப்போது சத்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

எலெக்ட்ரானிக் சிட்டி ஸ்டாப் வந்தது. அமுதனும் சத்யாவும் இறங்கினர். அதே இடத்தில் அவரும் இறங்கினார். என்றும் இல்லாமல் அன்று இறங்கிய சிறிது நேரத்திலேயே பஸ் வந்தது. அமுதனை அதில் ஏற்றிவிட்டு தன் கடமையை முடித்த சத்யா, மனம் முழுக்க திருப்தியுடனும் முகம் முழுக்க தூக்கத்துடனும் தன் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் இருந்தது அவள் ஹாஸ்டல்.

சிறிது தூரம் நடந்தவளுக்கு திடீரென அவளை யாரோ பின் தொடர்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது. திரும்பி பார்த்த அவளுக்கு பேரதிர்ச்சி. அவள் இடம் கொடுத்த அந்த நடுத்தர வயது நபர் அவளுக்கு 10 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தார்.

'என்னடா இது ? இடம் கொடுத்தது ஒரு தப்பா... எதுக்கு என்ன பாலோ பண்றாரு ' என்ற குழப்பத்தை மனதில் வைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து புன்னகையை படரவிட்டாள்.

(ஆங்கிலத்தில் )

"என்ன இவ்ளோ நேரம் கழிச்சு தனியா போயிட்ருக்கிங்க ?" என்றார் அந்த நபர் அதே புன்முறுவலோடு.

"ஆமாங்க... ஒரு பிரெண்டோட கல்யாணம் .. அதுக்கு போயிட்டு வர லேட்டாயிடுச்சு... "

"ஓ.. சரி சரி ... கொஞ்சம் சீக்கிரமா வந்துருக்கலாம்.. இந்த ஊர் கொஞ்சம் சேப் இல்ல இந்த டைம்ல "

'ஐயையோ.. இவர் முதல்ல எதுக்கு வரார்னு தெரிலையே..' என்று எண்ணியவாறு "உங்க வீடும் இந்த பக்கம் தானா ?" என்றாள் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள எண்ணிய சத்யா.

"இல்ல இல்ல.. என் வீடு அந்த பஸ் ஸ்டாப் பக்கம் தான்.. நீங்க தனிய போறிங்களே னு தான் பின்னாடி வந்தேன்"

"ஐயோ... அதெல்லாம் பரவாயில்ல ... நான் போயிக்கறேன்... நீங்க ஏன் கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வரிங்க ?"

"நா கூட வர்றது தெரிஞ்சாலே நீங்க பயப்படுவிங்க னு தெரியும்... அதனால தான் உங்களுக்கே தெரியாம வரலாம்னு பாத்தேன். ஆனா நீங்க என்ன பாத்துட்டிங்க " என்றார் கள்ளம் கபடம் இல்லாத புன்னகையோடு.

"இல்ல... நா இந்த டைம்ல நெறைய தடவ போயிருக்கேன் .. ஏதும் பிரச்சனை இல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.."

"இல்ல மா... நா உங்க கூட வரது உங்க சேப்டிக்காகனு மட்டும் சொல்லிட முடியாது...  எனக்காக இடம் குடுத்த நீங்க , பத்தரமா வீட்டுக்கு போயிட்டீங்கனு தெரிஞ்சா ஒரு திருப்தி அவ்ளோ தான் . அதுவும் இல்லாம உங்கள பாத்து என் சிஸ்டர் ஞாபகம் வந்துருச்சு"

சினிமாத்தனமாக இருந்தாலும் அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த நேர்மை அவளை ஏதோ செய்தது. இவரையா இவ்ளோ நேரம் சந்தேகப்பட்டோம் எனக் குறுகினாள்.

அவ்வளவு நேரம் யாரோவாக இருந்த அவர், அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படி தான் இருந்திருப்பாரோ என்று அவளை எண்ண வைத்தார். "அண்ணா ..." என்று அழைக்க ஆரம்பித்தாள்.

மீதியிருந்த 1 கிமீ தூரமும் மனிதமும் அன்பும் நிறைந்த பாதையாக மாறியது.



 

 
இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸாய் அவள் சிகை,

படர்ந்து விரிந்த வாழைக்காய் பஜ்ஜியாய் அவள் நெற்றி,

ஜீராவில் ஊறிய குலாப் ஜாமுனாய் அவள் கண்கள்,

பார்த்த உடன் ஈர்க்கும் மிளகாய் பஜ்ஜியாய் அவள் மூக்கு,

பிய்த்து திங்க தூண்டும் கிரீம் பன்னாய் அவள் கன்னங்கள்,

இனிமை தெறிக்கும் பலாச்சுளையாய் அவள் இதழ்கள்,

எண்ணிலடங்கா வாழைத்தண்டு பொரியலாய் அவள் பற்கள், 

மெலிதான உருளைக்கிழங்கு சிப்ஸாய் அவள் புன்னகை,

கடித்தவுடன் கரையும் பிஷ் பிங்கராய் அவள் விரல்கள்,

கடிக்க முடியாத பக்கோடாவாய் அவள் மனம்,

செரிக்காத பரோட்டவாய் அவள் நினைவுகள்,

அறுசுவை இருந்தும் அருந்த முடியாத அன்னக்காவடியாய் நான் ...!


தம்பி , என்ன ஆளுங்க நீங்க ?"

எட்டு திக்கும் எதிர்ப்படும் வழக்கமான கேள்வி தான் இது. ஆனால், கேட்பவர்கள் அனைவரும் என்னை விட வயதில் பெரியவர்களாதலால் பொது நாகரிகம் கருதி அவர்களை அசிங்கமாக பேச முடியாத கையறு நிலையில் இக்கட்டுரை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். 'எல்லாரும் கேக்கற சாதாரண கேள்வி தானே, இதுல பதில் சொல்றதுக்கு என்ன பிரச்சன ?' என்று என்னை வினவ அனைவருக்கும் அனுமதி உண்டு. 'உன் பேர் என்ன ?' என்ற கேள்வியைப் போல் 'நீ எந்த ஜாதி ?'  என்கிற கேள்வியும் சாதாரணமாகி போனதென்னவோ உண்மை தான். ஆனால், என் பேரை நான் சொல்லும்போது என்னை மதிப்பீடு செய்ய எவரும் இலர். 'லோகேஸ் னு பேர் வெச்சவன் எல்லாம் இப்டி தான் இருப்பான்' என்று நான் எவர் கூறவும் கேட்டதில்லை. இதே நிலை ஜாதி பற்றிய கேள்விக்கு உண்டா எனில், கண்டிப்பாக இல்லை.

நான் எந்த ஜாதிப் பெயரை கூறி இருந்தாலும், 'நா பாத்தப்பவே நெனச்சேன் நீ இந்த ஆளா தான் இருப்பேன் ' என்று தன் தீர்க்கத்தரிசனத்தை தம்பட்டம் அடித்துக் கொள்வது தான் பலரின் வாடிக்கை. இதையும் தாண்டி நான் இக்கேள்விக்கு பதில் கூற தயக்கம் காட்ட காரணம்,  என் பதிலுக்கு பிறகு அவர்கள் என்னிடத்தில் காட்டும் போக்கில் ஏற்படும் மாற்றம் தான். உதாரணமாக அவர்களின் கேள்விக்கு நான் ஒரு ஜாதியை பதிலாக கூறுகிறேன் எனில், அவர்களுடைய மன ஓட்டம் பலவாறாக பின்னிப் பிணைய வாய்ப்புகள் உள்ளன.

'இவன் நம்மள விட கீழ் ஜாதியா இருக்கானே, இவன நம்ம வீட்டுக்குள்ள விடலாமா ? இவன் பழக்கத்த எப்டி அளவோட நிறுத்திக்கறது ?'

'இவன் நம்மள விட மேல் ஜாதியா இருக்கானே, நம்ம ஜாதி தெரிஞ்சா நம்ம கூட எல்லாம் பழகுவானா? நம்ம வீட்டுக்கெல்லாம் வருவானா ?'

'அட நம்ம ஜாதிப் பையன். மத்தவங்கள விட இவன் நமக்கு நல்லா செட் ஆவான் '

இவற்றில் எது அவர்களது சிந்தனையாக இருந்தாலும் எனக்கு சங்கடம் தான். 'இவ்ளோ பேசறியே அவங்க என்ன நெனச்சா உனக்கு என்ன ? நீ பாட்டுக்கு உன் வேலைய பாத்துட்டு போக வேண்டியது தானே ' என்று நீங்கள் என்னை கூறலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நடந்து கொள்ளும் விதம், என்னுடைய செயல்பாடுகளை வைத்து என்னை ஒருவர் மதிப்பீடு செய்கிறார் என்றால் அதை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் மற்றவரை மதிப்பீடு செய்து வாழ்வது தானே மனிதனின் மரபு. அதைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தால், வாழ்வதே குற்றம் தான் என்று சொல்லி முடிக்க வேண்டும். அதனால் அதை விடுத்து மதிப்பீடு செய்ய வேறேதும் கிடைக்காமல் ஜாதியை வைத்து செய்பவர்களை மட்டும் குற்றம் சொல்வோம்.

ஏதோ ஒரு நாள் , ஏதோ ஒரு காரணத்திற்காக , என் பரம்பரையில் எவரோ ஒருவர், அவருக்குத் தோன்றியதால் பின்பற்றிய ஜாதி, இன்று 'இவன் இப்படித்தான் ' என்று என்னைப் பற்றி தீர்மானிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த ஜாதிகள் எப்படி தோன்றியிருக்கும் என நான் பல முறை சிந்தித்தது உண்டு. தொழிலை வைத்து ஜாதிகள் உருவானதாக ஒரு கருத்து இருக்கிறது. அப்படி பார்க்கையில், எதை வைத்து இது மேல் தட்டு தொழில், இது கீழ் தட்டு தொழில் என்பதை தீர்மானித்தார்கள். வாழ்வியல்  சமநிலை என்பது எல்லா தொழிலும் தடையின்றி நடக்கும் போது தானே இருக்கும்.  ஒருவன் அவர்கள் பரம்பரையாய் செய்யும் தொழிலை விடுத்து, இன்னொரு தொழிலை செய்ய முற்பட்டால் ஜாதி மாறியதாக கருதப்படுவானா?  அல்லது ஒருவன் அவன் உண்ணும் உணவை உழவு செய்வது தொடங்கி, அவன் கழிவை அவனே சுத்தம் செய்து கொள்வது வரை அனைத்தையும் அவனே செய்தால் தான் ஜாதிப் பிரிவினை தீர்வு பெறுமா ?

சரி, கொள்கைகளை வைத்து ஜாதிகள் வந்திருக்குமோ என்று கூட யோசித்துப் பார்த்தேன். அசைவம் உண்ணக்கூடாது, குளிக்காமல் வீட்டிற்குள் செல்லக்கூடாது இது போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே இந்த கொள்கைகளை வேறுபடுத்தி காண்பிக்கின்றன. இவர்களுக்கு பின்னால் வரும் தலைமுறை நாகரிக வளர்ச்சியில் இதை பின்பற்றாமல் போனால் வேற்று ஜாதி என்று ஒதுக்கி வைக்கப்படுவார்களா ? அல்லது இதெல்லாம் செய்கிறேன் என சத்தியம் செய்து ஒருவன் பின்பற்ற ஆரம்பித்தால் அவன் அந்த குறிப்பிட்ட ஜாதியில் புதுவரவாக கருதப்படுவானா?

கடைசியாக வழிபடும் கடவுள்களை வைத்து ஜாதிகள் பிரிக்கப்பட்டிருக்குமோ என்று கூட எண்ணினேன். ஆனால், 'அவனை கும்பிடுபவன் வீட்டில் சாப்பிடாதே ','அவளை கும்பிடுபவனுக்கு உன் மகளை திருமணம் செய்து வைக்காதே ' என்று எந்த கடவுளும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அது கடவுளே இல்லை என்பது வேறு விஷயம். அதை விடுத்து பகுத்தறிவு கொண்டு திரியும் மனித கடவுள்களை கும்பிடலாமே ?

இப்படி எந்த காரணமும் சமாதானப்படுத்தாத நிலையில், ஜாதி நம் வாழ்வில் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருப்பது வேதனையான விஷயம் தான்.  இதை நான் உணர்ந்த தருணம், 'சாதிகள் இல்லையடி பாப்பா ' என்று சொல்லிக்கொடுத்த வாத்தியாரே 'நேத்தே உன்ன சாதிச் சான்றிதழ் கொண்டு வர சொன்னேன்ல, இன்னைக்கும் கொண்டு வராம வந்துருக்க. வெளிய நின்னே க்ளாஸ் அட்டென்ட் பண்ணு ' என்று சொன்ன போது தான்.

சில காலங்களுக்கு முன்னால் வேண்டுமானால் தன் ஜாதி மட்டுமின்றி, உற்றார், உறவினர், பெண் எடுத்தோர், பெண் கொடுத்தோர்  ஆகியோரது குலம் , கோத்திரம் முதலியனவற்றை அனைவருக்கும் கூறிக் கொள்வதில் பெருமை இருந்திருக்கலாம். அதை இச்சந்ததியினருக்கும் புகுத்த முற்படாதீர்கள், அது வேறு விதமான அசம்பாவிதங்களை தொடங்கி வைக்க வாய்ப்பிருக்கிறது. 'நீ லவ் பண்ணுனாலும் நம்ம ஜாதிக்காரங்களா பாத்து லவ் பண்ணு ' என சில பெற்றோர் அவர்களுடைய மகன்/மகள் களுக்கு அறிவுரை கூற கேட்டிருக்கிறேன். ஏற்கனவே காதல்களுக்காக பல கொலைகளையும், தற்கொலைகளையும் பார்த்த இச்சமூகம், 'நான் ஏன் இந்த ஜாதில பொறக்கல '  என்ற தற்கொலைகளையும், 'நீ ஏன் இந்த ஜாதில பொறக்கல'  என்ற கொலைகளையும் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

பிற்காலத்தில் ஜாதிகளே இல்லாமல் போகலாம், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை 'நீ என்ன ஜாதி ?' என்று கேட்பவர்களுக்கு பதில் ....

ஜாதி வெறியர்களுக்கு நான் கீழ் ஜாதி,
'ஜாதில இவ்ளோ விஷயம் இருக்கா' என்பவர்களுக்கு நான் மேல் ஜாதி,
ஜாதி எதற்கு என்பவர்களுக்கு ஒரே ஜாதி.