நாயே!

, , No Comments


பரியேறும் பெருமாள் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும். கறுப்பியை தண்டவாளத்தில் கட்டி வைக்கும் முதல் காட்சியில் திரையில் மட்டுமின்றி அதை தாண்டியும் நம்முள் ஒரு விதமான பதைபதைப்பு நிறைந்திருக்கும். அதே மனநிலை மாரி செல்வராஜ் எழுதிய "அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்" என்ற சிறுகதையை படிக்கும் போதும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு நாயின் பார்வையில் அதன் வாழ்வை பார்க்க நேரிட்டால் அது அப்படி தான் இருக்க முடியும் என்று நம்மை நம்ப செய்து விடுகிறது. சாதாரணமாகவே  நாய் என்ற சொல்லை நாம் இழிவுபடுத்த மட்டுமே கூற விழைகின்றோம். உதாரணமாக,


"அவன் ஒரு பரதேசி நாய்!"


"அவனைப்  பாத்தியா நாய் மாறி பொறுக்கிட்டு இருக்கான்"


"ஏண்டா நாய் மாறி சாப்பிட்ற ?"


இப்படியெல்லாம் சொல்வதை மிக சௌகரியமாக பழகிக் கொண்டோம். ஆனால், இதை அப்படியே மாற்றி நாயை ஒரு அப்பாவியான ஜீவனாய் முன்னிறுத்துவதில் தான் மாரி செல்வராஜ் மாறுபடுகிறார். கறுப்பியும் சுரேஷும் நம் கண்களை மட்டுமின்றி மனங்களையும் நிறைத்து விடுகிறார்கள். அவர்களை பார்க்கும்போதும் படிக்கும்போதும் தான் இதற்கு முன் நான் கடந்து வந்த எத்தனையோ கறுப்பிகளையும் சுரேஷ்களையும் திரும்பிப் பார்க்க தோன்றுகிறது. அந்த கதையில் வரும் சுரேஷ் இப்படி சொல்லியிருப்பான்.


'மாங்கொட்டாரத்தாளையும், ஐயாக்குட்டியையும் நான் தான் வெறி பிடித்து கடித்தேன் என்று சொல்வதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாங்கொட்டாரத்தாள் அந்த பல்லு போன பாழாப்போன கிழவி என் வாலை மிதித்து நசுக்கியதால் வலி பொறுக்க முடியாமல் கடித்துவிட்டேன். அந்த ஐயாக்குட்டி கண் தெரியாத கபோதி ஒரு ஓரமாய் படுத்திருந்த என் மீது பொத்தென்று விழுந்ததால் அவசரத்தில் பயந்து கடித்தேன். நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை அப்படி செய்யும் அளவுக்கு என் உடம்பில் எனக்கு திறனும் இல்லை. அப்புறம் அப்படி ஒரு கடிநாயாக நான் வளர்க்கப்படவுமில்லை. அதற்காக "நான் ஏதோ செத்துப்போன கழுதை கறியை தின்னுட்டு வந்து கோட்டி புடிச்சு எல்லாரையும் கடிக்கிறேன்னு இவர்கள் சொல்வது அபாண்டம்".'


(மன்னிக்கவும். நான் இதை இங்கு எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். இருந்தாலும், எழுதாமல் விட என் மனம் ஒப்பவில்லை. அதனால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன். சுரேஷ் கடித்ததும் 'கர்ணன்' திருப்பி அடித்ததும் எந்த விதத்திலும் மாறுபட்டுவிடவில்லை என்னைப் பொறுத்தவரையில்!)


ஒரு எளிமையான அப்பாவியின் பேரில் நம்மால் எவ்வளவு எளிதில் குற்றம் சுமத்தி விடமுடிகிறது. இதையும் இன்னொன்றையும் நான் உணர சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.


அந்த இன்னொன்று என நான் கூறியது நா.முத்துக்குமார் சொன்ன இந்தக் கூற்று "நான் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை எதிர் வீட்டில் புறா வளர்ப்பவன் பறித்துக் கொள்கிறான்".


நான் எந்த செல்லப் பிராணியும் வளர்ப்பவன் அல்ல. எங்கள் வீட்டின் அருகில் சுற்றித் திரியும் கருவாச்சிக்கு அவ்வப்போது திண்பண்டங்கள் போடுவது உண்டு. 'கருவாச்சி' எந்த விதமான நிறவெறி காரணமுமின்றி அவளைப் போலவே அப்பாவியான எங்கள் வீட்டு பாப்பா வாஞ்சையுடன் வைத்த பெயர். இப்பொழுது கூட எங்கள் வீட்டுக் கதவின் முன்னால் காதுகளை மட்டும் தூக்கிக் கொண்டு படுத்திருக்கிறாள். அவள் என்னை துரத்தாமல் இருக்க லஞ்சமாக ஆரம்பித்த எங்கள் வீட்டு உணவும் திண்பண்டங்களும், நாளடைவில் அவளுக்கு அன்பான வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு நாள் அவளுக்கு நான் பிஸ்கட்டுகள் போட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ சில கற்கள் அவளை வந்து தாக்கியது. வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டு ஓடினாள் கருவாச்சி. அதிர்ச்சியில் கல் வந்த திசையில் நோக்கினேன் நான். நைட்டியை தூக்கி மடித்துக் கட்டியவாறு கையில் இன்னும் சில கற்களோடு ஆக்ரோஷமாக வந்து கொண்டிருந்தார் எங்கள் வீதி குடோன் அம்மா. எங்கேயோ ஓடி பயந்து பம்மிக்கொண்டிருந்த கருவாச்சியின் திசையில் கையில் இருந்த மீதி கற்களையும் வீசிவிட்டு கத்திக்கொண்டே அவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.


"திருட்டு நாய் கோழிய எல்லாம் வந்து தூக்கிட்டு போயிருது நைட்டு ஆனா... ஊர் மேயற நாய்க்கு நம்ம வீதில என்ன வேல... இந்த...." அதற்கு மேல் அவர் பேசியது கேட்காத தூரம் சென்றிருந்தார். நிற்க. என்னை யாரென்றே அவருக்கு தெரியாது அதனால் அவர் திட்டியது என்னைப் பற்றியதாக இருக்க வாய்ப்புகள் குறைவே!


கருவாச்சி அவர்கள் வீடு வரையில் சென்று எவருமே பார்த்ததில்லை, இருந்தும் இப்படியொரு குற்றச்சாட்டு வந்தது வீதியில் இருந்த அனைவருக்குமே ஆச்சர்யம் தான். சில நாட்களுக்கு பின் தான் தெரிந்தது, அந்த மாயமான கோழிகளுக்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு ரெகுலராக வந்து சென்று கொண்டிருந்த ஆசாமி என்று. அதன் பிறகு அந்த குடோன் அம்மாவின் சத்தம் வீதியில் கேட்கவில்லை. 'ஒரு நாய் தூக்கிட்டு போயிருச்சே' என்கிற ஆதங்கம் அவருக்கு ஆறியிருக்குமோ என்னவோ. ஆனால், கருவாச்சியின் காயங்கள் ஆற சில தினங்கள் பிடித்தன.


கருவாச்சி எனக்கு உணர்த்திய இன்னொரு கூற்று "அம்மா னா யாருக்கு தான் புடிக்காது. நாய் பூனைக்குக் கூட தான் புடிக்கும்". இது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் பேசிய வசனம்.


கருவாச்சி மிக கெட்டிக்காரி. ஒரே பிரசவத்தில் ஐந்து குட்டிகள். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே தான் மொத்த குடும்பமும் தஞ்சம். குட்டிகள் வந்த பிறகு கருவாச்சி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. நாங்கள் பிஸ்கட்டுகளோ உணவோ கொடுக்கும்போது குட்டிகள் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடும்போது நடுவில் வராமல் வேடிக்கைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் அன்பான அம்மாவாக மாறிவிட்டாள். அவளுக்கென தனியாக நாங்கள் ஏதாவது வைத்தாலும் குட்டிகள் அருகில் வந்துவிட்டால் சாப்பிடாமல் விலகி சென்றுவிடுகிறாள், விவரம் தெரியா குட்டிகளும் முழுவதையும் முக்கி விடுகின்றன. அம்மாக்கள் பட்டினி கிடப்பது இப்புவியின் சாபம் தான் போலும்.


இதைப் பற்றியெல்லாம் பேசும்போது எனக்கு ஜிக்கியின் ஞாபகம் வருகிறது. எனக்கு விவரம் தெரியாத வயதில் எங்கள் வீட்டிற்கு வந்தவன் தான் ஜிக்கி. எனக்கு ஞாபகம் இருப்பது எல்லாம் தன் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடக்கவே முடியாமல் இருந்த ஜிக்கி. அப்படி இருந்தவனை எங்கள் வீட்டில் இருந்த அநேகம் பேரும் அருவருப்புடனே பார்த்தோம். எங்கேயாவது கொண்டு விட்டு விட வேண்டுமென்பதே அனைவரின் தீர்க்கமான முடிவு. அப்படி ஒரு நாள் அவன் கொண்டு செல்லவும் பட்டான். எனக்கு இருக்கும் நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளின் பட்டியலில் இப்பொழுது இதுவும் இணைகிறது. 'வாய்ப்பு கிடைத்தால் பரிதாபமாக எங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜிக்கியை பாசமாக ஒரு முறையாவது கொஞ்சி விட வேண்டும். அருவருப்பை மட்டுமே என் கண்களில் இருந்து பார்த்தவனுக்கு ஒரு இம்மி அளவு அன்பையாவது காட்டி விட வேண்டும்.'


 "இத மட்டும் சொல்றியே.. நாய கொஞ்சறவங்கள எல்லாம் பாத்ததே இல்லையா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நிச்சயமாக பாசமழை பொழியும் பலரையும் எனக்கு தெரியும். என் நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் கூட குடும்பமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பதிவு என்னைப் போன்ற அலட்சியவாதிகளுக்காக மட்டுமே எழுதியது. இந்த நேரத்தில் என்னையும் ஒரு நாயைப் போல எண்ணிக் கொஞ்சிய ஒரு பெண்ணைப் பற்றி கூற நினைக்கிறேன். என் கல்லூரித் தோழி என்னை அழைக்கும்போதெல்லாம் "நாயே" என்று கூறி தான் அழைப்பாள். அதில் ஒரு உரிமையும் கனிவும் எப்போதும் கலந்திருக்கும். இப்போதும் நாங்கள் எப்போதாவது பேசிக்கொள்ளும்போது அவள் அப்படி அழைப்பதுண்டு. அவள் என்னை "நாயே" என்றழைப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது இன்னும் பிடிக்கிறது!


0 comments:

Post a Comment