ஓரக் கண்ணால...!

, , No Comments
இரவு 7 :30 மணி  - பொள்ளாச்சி பேருந்து நிலையம்

பொதுவாகவே பயணம் செய்வதென்றால் துள்ளிக்குதிக்கும்  சத்யா , அன்று கனத்த இதயத்துடன் பிடிக்காத பயணத்திற்கு  அளவான மேக்கப்பில் பிரயத்தனமாகி டவுன் பஸ்ஸில் வந்திறங்கினாள்.  அவள் பெங்களுரு கிளம்ப வேண்டிய நேரம் அது , பி.டி. பீரியட் முடிந்து வகுப்பிற்குள் செல்லும் மனநிலையில் அவள். காரணம், அவள் அம்மா அப்பாவுடன் கழித்த அந்த இரண்டு நாட்கள். எந்நேரமும் பேசிக் கொல்லும் அவளை பிரிவதில் அவள் அம்மாவிற்கும் வருத்தம் தான்.  ஆனாலும், வொர்க் பிரம் ஹோம் தர மறுத்த அவள் ஆபீஸின் அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை.

அவளை ஏற்றிச் செல்ல தயாராக இருந்த அந்த பேருந்தை பார்த்தாள் , ஆடி அசைந்து செல்வதில் அவளையே மிஞ்சிடும் கண்டிஷனில் இருந்தது. இருந்தும் அவள் தேடி பிடித்து பதிவு செய்த சீட் ஒரு ஜன்னலோர சீட் என்பது ஞாபகத்திற்கு வந்த போது லேசான மன நிம்மதி பிறந்தது. இளையராஜாவும் ஜன்னலோர காற்றும் செய்யும் காதலில் தன் கவலைகளை மறக்கலாம் என்ற ஆசையும் ஓர் காரணம். போய் உட்கார்ந்த உடனே காதுகளை ஹெட்செட்டில் கொடுத்து விட வேண்டுமென உறுதியுடன் பேருந்தினுள் ஏறினாள்.

தன் சீட்டிற்கு பக்கத்துக்கு சீட்டை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த சக பயணியை பார்த்தாள்.

'என்ன குமுதா சிட்டிங் எல்லாம் ஸ்டைலா இருக்கு ?' என்று விஜய் சேதுபதி வாய்சில் பார்த்த உடனே கலாய்த்து விட வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. அந்த கும்மிருட்டிலும் கண்ணை பறிக்கும் அளவிற்கு மேக்கப்புடன் அமர்ந்திருந்தால் அந்த பெண். 'சரி, அவ எப்டி இருந்தா நமக்கு என்ன ?' என்று நினைத்துக் கொண்டு தன் சீட்டை ஆக்கிரமிக்க நெருங்கினாள் சத்யா.

குபீரென்று ஒரு வாடை அவளை தூக்கி வாரி போட்டது, ஸ்டைலான அந்த சக பயணியிடம் இருந்து தான் அந்த வாடை வந்தது. அரசின் மானிய விலை சேவையை பயன்படுத்தியதால் வரும் வாடையோ என்ற ஐயம் ஒரு நிமிடம் சத்யாவிற்கு உதித்தது. பிறகு அதை விட மோசமான ஒரு பெர்ப்யூமின் வாடை என்பதை உணர்ந்தாள்.

'சரி, உக்காந்து ஜன்னல தொறந்து விட்டா சரியாப் போகும் ' என்ற தைரியத்தில் சீட்டில் தன்னை அமர்த்திக் கொண்டாள்.  வாடையின் வலு சற்று கூடியது. இருந்தும் பொறுத்துக் கொண்டு, காதுகளை இளையராஜாவிடம் ஒப்படைத்தாள். பேருந்து கிளம்பியது.

ஒரு 10 கிமீ  கூட சென்றிருக்காது, சத்யாவின் தோள்பட்டையை அந்த சகபயணியின் கை சொறிந்தது. "எக்ஸ்க்யூஸ்  மீ , கொஞ்சம் குளிரா இருக்கு அந்த விண்டோவ க்ளோஸ் பண்றிங்களா ?"

'என்ன டா இது சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை, இத நம்பி தானே இவ பக்கத்துலயே உக்காந்தோம் ' என்று தனக்குள்ளே தலையில் அடித்துக் கொண்டாள்.  முடியாது என்று முரட்டுத்தனமாக சொல்லி விடலாமா என்று தோன்றிய யோசனையை உடனே உதறினாள். ஏனெனில், இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கும் குளிர ஆரம்பித்து விடும். அதன் பிறகு மூடினால் அது அவமானம் தான். அப்படி ஒரு தோல்வியை அவள் மனம் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. பெரிய மனது பண்ணி ஜன்னலை மூடுவது போல் "ஸ்யூர் " என்று கெத்தாக சொல்லி ஜன்னலை இறக்கி விட்டாள்.

அது எவ்வளவு பெரிய தவறு என்று அவளுக்கு சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. அந்த வாடை மீண்டும் அவளை தாக்க ஆரம்பித்தது. மூச்சடைத்தது. சட்டென தன்னை ஒரு ஆஸ்துமா நோயாளியாக உணர்ந்தாள். 'அப்பால போ சாத்தானே' என்று அந்த வாடையை துரத்த எண்ணினாள். ஆனால், அது போவதற்கு தான் வழி இல்லையே.

'சரி நாம போவோம் ' என்று எண்ணியவாறு  "எக்ஸ்க்யூஸ்  மீ,  உங்களுக்கு பிராப்ளம் இல்லேன்னா விண்டோ சீட் எடுத்துக்கரிங்களா ?" என்றாள் தன் சக பயணியிடம். இதற்கு முன் சத்யா செய்த உதவியை நினைவு கூர்ந்தாளோ என்னவோ உடனே சரி என்றாள். சீட்டுகள் மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்த சீட்டில் அமர்ந்தவுடன் அவள் இடப்புறம் இருந்த சீட்டை நோக்கியவாறு சாய்ந்து கொண்டாள் சத்யா. ஏதேதோ எண்ணங்கள் அவளை ஆட்கொண்டன, அதற்குமேல் இவளை சித்திரவதை செய்த இந்த வாடையும் சேர்ந்து அவள் கண்களில் நீரை வார்த்தன.  எதற்காக அழுதோம், எவ்வளவு நேரம் அழுதோம் என்று அறியாமல் தூங்கிப் போனாள் அவள்.

முழிப்பு வந்த போது அவளை 'பூவே செம்பூவே ' பாடல் அவளை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாக கண்களை திறந்தாள். அவள் தூங்கும் முன் வெறிச்சோடி இருந்த இடப்பக்கம் இருந்த சீட்டில்  இளைஞன் ஒருவன் உறங்கிக் கொண்டிருந்தான். மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மெலிதான லைட் வெளிச்சத்தில் அந்த இளைஞனை பார்த்தாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த வெள்ளை சட்டை அணிந்திருந்தான். அந்த இளைஞன் மாநிறம் தான் எனினும் வெள்ளை சட்டையும், மெல்லிய லைட் வெளிச்சமும் அவனை அழகிய தமிழ்மகன் பட்டத்திற்கு போட்டி போட வைத்துக் கொண்டிருந்தது சத்யாவின் மனது. தூங்கும் முன் அவளுக்கு இருந்த யோசனைகள் குடிபெயர்ந்து, வெள்ளை சட்டை அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது. 'எனக்கு ஏன் வெள்ளை சட்டை னா இவ்ளோ புடிக்குது ? ஏன்னா என்னோட மனசும் வெள்ளை ஆச்சே ' என்று தனக்கு தானே மொக்கையைப் போட்டுக்கொண்டு, அதற்கு வெட்கமும் பட்டுக்கொண்டு அவனைப் பார்த்தவாறே சாய்ந்திருந்தாள்.

திடீரென்று பேருந்து ஒரு டோல்கேட்டில் நின்றது. சிலர் விழிக்க ஆரம்பித்ததில் சலசலப்பு ஏற்பட்டது. அதை கவனித்துவிட்டு  திரும்பிய சத்யாவிற்கு ஒரு அதிர்ச்சி. அந்த இளைஞன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு கிடுகிடுக்க ஆரம்பித்தது . டக்கென்று கண்களை மூடிக்கொண்டாள்.

வெட்கம் அவள் கன்னங்களை சிவக்கச் செய்தது, இதழ்களை புன்முறுவல் பூக்க செய்தது. கண்களை திறந்தும் திறக்காமல் அவன் பார்க்கிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் சற்றே கண்ணசந்தவுடன் கண்களை திறந்து பார்க்க ஆரம்பித்தாள். திடீரென்று அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். மீண்டும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். இதே போன்று மூன்று முறை நிகழ்ந்தது.

'அடியே சத்யா உனக்கு என்ன ஆச்சு? அவனுக்கு தான் நீ பாக்கறது தெரிஞ்சுருச்சே.. இன்னும் ஏன் பாத்துட்டு இருக்க..! வெக்கமா இல்ல ?' என்று அவளையே திட்டிக் கொண்டாள் சத்யா . 'அதனால என்ன எனக்கு புடிச்சுருக்கு நா பாக்கறேன்' என்று அந்த இளைஞன் மீது கொண்ட ஈர்ப்பினால் அவளே சமாளித்துக் கொண்டாள்.

'அவன் பேர் என்னவா இருக்கும் ? சக்தி, கௌதம், கார்த்தி , சிவா இந்த பேர்ல எதாவது ஒன்னா தான் இருக்கும் . ஏன்னா இதெல்லாம் தானே எனக்கு புடிச்ச பேரு ' என்று தனக்கு தானே அசடும் வழிந்து கொண்டாள் சத்யா.

அதே சமயம் அந்த இளைஞனின் மனம் வேறொரு உலகில் பறந்து கொண்டிருந்தது. எதார்த்தமாக அவன் கண் திறந்த போது மங்கலான வெளிச்சத்தில் அவன் பார்த்தது ஒரு  பெண்.  தூக்கத்திலும் ஒரு ஏக்கமான முகத்துடன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தவளை அவனுக்கு உடனே பிடித்து விட்டது. பெண்களைப் பிடித்தாலும் அதை சொல்வதற்கோ, வெளிபடுத்துவதற்கோ எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் தயக்கம் அவனுக்கும் வந்தது. அதற்கு காரணம், பலரால் பெண்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை தான். அவன் அவளைப் பார்த்து சிரிக்க முயன்றால் கூட அது அவனுக்கு சூனியமாகி விட வாய்ப்புண்டு.

பேருந்து ஒரு டோல்கேட்டில் நின்ற போது, அவளும் அவனைப் பார்ப்பதை உணர்ந்து அவன் உள்ளம் பூரித்தது. மனதிற்குள் பல ஆயிரம் முறை சிரித்துக் கொண்டான். ஆண்களின் நாணம் பற்றி கதைகளில் மட்டுமே பார்த்தவனுக்கு, அவனுள் பார்ப்பது ஒரு புது வித அனுபவத்தை தந்தது. 'நம்மளையும் ஒரு பொண்ணு பாக்கறா, இத நாளைக்கு போய் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கெத்து போடணும்' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். ஆனாலும் அவள் மீது ஏனோ ஒரு மரியாதை அவனுக்கு உதயமாகியிருந்தது.  எண்ணங்களை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிவிடாத பெண்களினூடே இவள் கண்டிப்பாய் ஒரு வித்தியாசமான பெண்ணாய் தான் இருக்க வேண்டும்.  தூக்கத்தால் சோர்ந்து போயிருந்த  கோழி முட்டைப் போன்ற அவள் கண்கள் அவனை ஏதோ செய்தது.

அதன் பிறகு இருவரையும் தூக்கம் தூக்கிச் செல்ல மறுத்தது. விடியும் வரை முடியாப் பயணமாய் அவர்கள் பார்வை பார்ப்பதும், நிற்பதுமாய் பயணித்துக் கொண்டிருந்தன. ஒரு முடிவில்லா பயணத்தை விரும்பி எதிர்பார்த்தவர்களாய் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக சத்யா இறங்கும் இடம் வந்தது. பொள்ளாச்சியில் பேருந்தில் ஏறும்போது இருந்தததை விட மனம் கனத்திருந்தது.  அவன் எங்கே இறங்க போகிறான் என்று தெரியாது, அவளால் மறுபடியும் சந்திக்க முடியுமா என்று தெரியாது , அப்படியே சந்தித்தாலும் அவன் தனக்கு பொருத்தமானவனாய் இருப்பானா என்று தெரியாது. இப்படி பல பதில் தெரியாத கேள்விகளினூடே  அவனை பிரிவது அவளுக்கு சோகத்தை தந்தது.

சோகத்தோடு படிக்கட்டின் அருகில் நின்றுகொண்டு அவனை திரும்பி பார்த்தாள்.  அவனும் எதிர்பார்த்த மாதிரியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவள் பார்த்த உடன் மெலிதான புன்னகையை தன் இதழில் தவழவிட்டான்.  சத்யாவிற்கு பல்பு எரிய ஆரம்பித்தது. 1000 வாட்ஸ் பவரோடு தன் புன்னகையை படரவிட்டாள்.

"டேய்.. வெள்ள சொக்கா உன்ன எங்க இருந்தாலும் கண்டுபுடிக்கறேன் டா ! உன் பேர் என்னனு எனக்கு தெரிஞ்சே ஆகணும்" என்று சபதமிட்டுக் கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினாள் சத்யா.

அதே சமயம் பேருந்தினுள் அந்த இளைஞனை கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்த போது 'அம்மா' என்று அலறியது அது. ஆன் செய்து காதில் வைத்து "அம்மா" என்றான்.

"டேய் கார்த்தி... ரீச் ஆயிட்டியா ?" என்றது அவன் அம்மாவின் குரல்.

0 comments:

Post a Comment