பிளாஷ்பேக் 1 - அவளும் நானும்

, , No Comments

பெசன்ட் நகர் பீச்  - மாலை 6.30  மணி

கடலை விற்பவரும் கடலைப் போடுவதை கடமையாய் கொண்டிருக்க, அதை வெறிக்க பார்த்துக் கொண்டு சில கூட்டம் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. அதில் நாங்களும் ஒன்றாக ஒன்றிப் போயிருந்தோம். சென்னைக்கு எங்களின் முதல் விஜயம் என்பதை எங்கள் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவிற்கு வாயைத் திறந்து சிலாகித்துக் கொண்டிருந்தோம்.

வழக்கமாக சிங்கிள் என சொல்லிக் கொள்ளும் மொட்டை பையன்கள் வாங்கி உண்ணும் அதிகம் செலவாகாத பண்டங்களை வாங்கிக் கொறித்துக் கொண்டே சுற்றி வந்து கொண்டிருந்தோம். பீச் என்றால் கடல் அலை மட்டுமே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, காதல் அலையை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி தான்.

குடைக்குள் மழையைக் கூட பார்த்துவிட்ட எனக்கு, குடைக்குள் குழைந்து கொண்டிருந்த ஒரு ஜோடியை பார்த்தவுடன் பீறிட்டு வந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள எங்களுள் சென்னைவாசியான அரவிந்தை நோண்டினேன்.

"என்ன மச்சான், மழையும் இல்ல வெயிலும் இல்ல இங்க ஒருத்தன் கொட புடிச்சுட்டு உக்காந்துருக்கான் ?"

"அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கூட கொட புடிப்பானு கேள்விபட்டதில்ல ? அதான் இங்க புடிச்சுட்டே வாழ்ந்துட்டு இருக்கான்" என்றான் அரவிந்த் தனக்கே உண்டான கவித்துவமான கண்றாவி நகைச்சுவையோடு.

"இருந்தாலும்...." என்று மேலும் ஒரு சந்தேகத்தை கேட்க சென்ற என்னை தடுத்து, "போதும் மச்சான் மூடிட்டு வா!" என்றான் அரவிந்த்.

"அவங்க ஏற்கனவே மூடி தான் வெச்சுருக்காங்க டா" என்றேன் அவனை வம்பிழுக்க.

"அவங்களுத சொல்லல மச்சான், உன்னோடத சொன்னேன் "

"ரைட்டு...!" . இதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்று விக்டரிடம் சென்றேன்.

"ஆர்த்தி அன்னைக்கு யெல்லோ டிரஸ் ல வந்தா பாரு. பப்பா ! என்ன அழகு டா சாமி !" என்று பிரவீனிடம் விவரித்துக் கொண்டிருந்தான். அவனும் எப்பவும் போல் எதிர்த்து பேசாமல் ஹூம் போட்டுக் கொண்டிருந்தான்.

ஆர்த்தி , எங்கள் வகுப்புப் பெண்ணாய் இருந்தும் அவளிடம் நாங்கள் யாரும் அவ்வளவாக பேசியதில்லை. ஆனால், அவளை தோழியாக்கிக் கொள்ள முந்த போவது யார் என்ற பேச்சுவார்த்தை எங்களுக்குள் அடிக்கடி நடக்கும். அன்று அந்தப் பேச்சுவார்த்தைக்கான பிள்ளையார் சுழியை போட்டிருந்தான் விக்டர்.

"நான் அவகிட்ட போய் நம்பர் வாங்கலாம்னு இருக்கேன் டா " என்றான் விக்டர்.

பதறிப் போன நான் "அதெல்லாம் குடுக்க மாட்டா டா !" என்றேன்.

"ஏன் அப்டி சொல்ற ?"

"அது அப்டி தான்"

"அவ தரலைன்னா பாத்துக்கலாம். முதல்ல கேட்ரனும் ஊருக்கு போன உடனே "

"டேய்.. இதெல்லாம் தப்பு டா. நானும் கேப்பேன்" என்றேன் சிறுபிள்ளைத்தனமாக.

"அதெல்லாம் முடியாது நான் தான் கேப்பேன். யாராவது ஒருத்தர் தான் மச்சான் கேக்கணும். எல்லாரும் கேட்டா தரமாட்டா !" என்றான் வஞ்சிக்க நினைத்த விக்டர்.

"அதனால தான் மச்சான் சொல்றேன். நான் கேக்கறேன்னு "

இப்படியே இருவருக்கும் வாய்வழி யுத்தம் நடந்தது. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிரவீன்,"சரி , ஒரு போட்டி வெப்போம். யார் ஜெயிக்கராங்களோ அவங்க போய் பேசலாம். இன்னொருத்தர் ஒதுங்கிடனும் " என்றொரு மகத்துவமான சிந்தனையைக் கூறினான்.

இருவரும் ஆமோதித்த உடன் , "சரி , என்ன போட்டினு நீங்களே சொல்லுங்க ?" என்றான் பஞ்சாயத்துத் தலைவராக மாறிய பிரவீன்.

இருவருமே வாழைப்பழ சோம்பேறிகள் என்பதால் வியர்க்காமல் விளையாடக் கூடிய போட்டியாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தோம். ஒரு வழியாக பட்டாணி வாங்க வைத்திருந்த காசில் பலூன் சுடுவதென்று பஞ்சாயத்தில் முடிவானது.

போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால் இருவருக்கும் ஒரே ஒரு வாய்ப்பளிக்கப்படும். பிரவீன் கூறுகின்ற அதே பலூனை தான் சுட வேண்டும்.

"சரி, ரெண்டு பேருமே சுட்டுட்டா ?" என்று தன் சந்தேகத்தை எழுப்பினான் விக்டர்.

"சுட்டா பாத்துக்கலாம். நீ முதல்ல சுடு நாயே !" என்று கொந்தளித்தான் பிரவீன்.

"அப்ப ரெண்டு பேருமே சுடலைன்னா ?" என்றேன் என் பங்கிற்கு.

"எவனும் அவகிட்ட பேசக்கூடாது. மூடிட்டு அவனவன் வேலைய பாக்கணும் " என்று இன்னும் உக்கிரமானான் பிரவீன்.

இதற்காகவே மொத்தமே 2,3 பலூன்கள் மட்டுமே உள்ள ஒரு கடையை தேர்ந்தெடுத்தனர்.

விக்டர் என்சிசியில் கற்ற ஷூட்டிங் வித்தையை இறக்கி என்னை தோற்கடிக்க ஆயத்தமானான். முகத்தில் எப்படியும் சுட்டுவிடுவேன் என்ற எகத்தாளம்.

துப்பாக்கி அவனிடம் முதலில் சென்றது, ஒரு ப்ளூ கலர் பலூனை கை நீட்டினான் பிரவீன். சற்றே மேலே இருந்தாலும் விக்டர் உயரமானவனாதலால் எப்படியும் சுட்டு விடுவான் என்று நான் உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.

அவனும் "இப்ப எப்டி சுடறேன் பாரு " என்று குறி பார்த்து சுட்டான். 'பட்' என்று பலூன் வெடிக்கும் சத்தம் பக்கத்துக்கு கடையிலிருந்து தான் வந்தது. விக்டர் மிஸ் செய்திருந்தான்.

அவனுடைய ஓவர் கான்பிடன்ஸ் அவனை வீழ்த்திவிட்டது. எனக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

'இனி நான் தோத்தாலும் பரவால டா' என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் ஜெயித்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு உற்சாகமளித்தது.

துப்பாக்கியை கையில் வாங்கினேன். பிரவீன் ஒரு வைலெட் கலர் பலூனை கை நீட்டினான். குறி பார்த்தேன். துப்பாக்கி சற்றே ஆடியது.

'கருமம் புடிச்ச கையே கொஞ்ச நேரம் நடுங்கித் தொலையாம இரு..' என்று திட்டினேன். கை கட்டுப்பட்டது.

சரியாக 30 விநாடிகள் அதே பொஸிசனில் நின்று அழுத்தினேன். 'பட்' என்ற சத்தம். இம்முறை நான் சுட்ட பலூனிலிருந்து.

சந்தோஷத்தில் குதித்தேன். "யேய்ய்ய்யய்ய்ய்"

"மச்சி, கண்ணும் என்னுது தான் பொண்ணும் என்னுது தான் " என்று விஜய் ஸ்டைலில் விக்டரிடம் டயலாக் பேசினேன்.

"ஓடிரு டா.. செம கடில இருக்கேன் " என்றான்.

"அட போடா !" என்று அன்று முழுவதும் அவனை வெறுப்பேத்தி மகிழ்ந்தேன்.

ஊருக்கு வந்த பின், அவளிடம் ஏதோ ஒரு தைரியத்தில் போன் நம்பரை வாங்கினேன். எங்களுக்குள் நட்பு மலர்ந்தது.

அவள் எனக்கு வீட்டிலிருந்து தக்காளி தொக்கு கொண்டு வந்து கொடுக்க, நான் அவளுக்கு சாக்லேட் கொடுக்க என்று எங்கள் உறவு மேலும் நெருக்கமானது.

'பழக்க வழக்கம் எல்லாம் தக்காளி தொக்கோடு நிறுத்திக்கணும் ' என்றவாக்கில் ஒரு நாள் "நானும் அந்த சீனியரும் கமிட் ஆயிட்டோம் " என்றாள்.   

அன்று தான் தெரிந்தது நான் சுட்ட பலூன் சீனியர் சுட்ட வடையில் பொசுங்கி விட்டதென்று. இன்றளவிலும் அவள் என் தோழியே . ஆனால், அந்த சம்பவம் என்னை முழுதும் மாற்றி விட்டது . விளைவு, இன்றும் நான் 'அவளும் நானும்'  என்ற பாடலைக் கூட 'நானும் நானும்' என்று தான் பாடிக் கொண்டிருக்கிறேன்.

0 comments:

Post a Comment