Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்றான் பாரதி. அவன் கனவு மட்டும் பலித்திருந்தால், பல கனவுகள் பலி ஆகாமல் இருந்திருக்கும். சாதி, மதம், இனம் ,மொழி , மாநிலம் , நாடு போன்ற மேம்போக்கான பாகுபாடுகளை பற்றி அலசி ஆராயும் நாம் இதற்கெல்லாம் வித்திட்ட பாலின பாகுபாட்டை  அலட்சியப் படுத்துவதில் ஆச்சர்யமில்லை. காரணம், அது இயல்பு என்றாகிப் போனது தான்.

பெண் என்பவள் ஒரு சக மனிதி  என்று உணரும் ஞானம் பலருக்கும் வாய்க்காமல் போனது ஏன் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. பதில் மட்டும் கிடைத்த பாடில்லை.  ஆண்களால் முடிந்த சில விஷயங்கள் பெண்களால் முடியாது, பெண்களால் முடிந்த சில விஷயங்கள் ஆண்களால் முடியாது.  அதை உணர்ந்து ஒருவரையொருவர் உறுதுணையாகக் கொண்டு உலக  வாழ்வின் பூரணத்தை நோக்கி  வழி நடத்திச் செல்வதே ஆண், பெண் படைப்பின் சித்தாந்தம். ஆனால், இங்கு நடப்பது அனைத்தும் அதற்கு நேர்மாறானவை.


சர்வாதிகாரம், வேற்றுமை இவையெல்லாம் நாட்டு நடப்பு என்பர், இதே தோரணையில் நடக்கும் வீட்டு நடப்பிற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமை என்றால் அது கொலை, கொள்ளை, வன்முறை மட்டுமே என்று நினைத்தால் மன்னிக்கவும். அதையும் தாண்டி பல வெளி வராத , பெண்களின் உள்ளங்களை மட்டுமே வாட்டி எடுக்கும் பல கொடுமைகளும் உள்ளன. உதாரணமாக, இங்கு இரு  கதைகளை  எடுத்துக் கொள்வோம்.

வித்யா ஒரு புத்திசாலி பெண். பள்ளி காலத்தில் அவளுடன் படித்த அனைவரையும் விட மதிப்பெண்களும் அறிவும் பெற்றவள். பட்டம் படித்து பொறியாளராக வேண்டும் என்பது தான் அவள் கனவு. ஆனால், அவளால் பொறியியல் பட்டதாரி மட்டுமே ஆக முடிந்தது. சமூகம் திணித்த திருமணம் தான் அதற்கு காரணம் . "என்ன இவ்ளோ வயசு ஆகியும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வெச்சுருக்கிங்க "  என்று ஒரு 22 வயது பெண்ணைப் பார்த்து கேட்கும் அவலம் இந்நாட்டில் மட்டுமே காணமுடியும் பொக்கிஷம். பல கண்டுபிடிப்புகளின் பிறப்புக்கு காரணமாக வேண்டிய அவளால், இரு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே உதவ முடிந்தது. குழந்தை பிறப்பு அவளால் மட்டுமே முடிந்த ஒன்று தான். அதற்காக அவள் கனவுகள் கலைக்கப்பட்டதற்கு காரணம் குழந்தைகள் என்றாகுமா? நிச்சயமாக இல்லை.

அவள் உடல் ரீதியாக எந்த விதத்திலும் புண்படுத்தப்படவில்லை. யாருடைய வார்த்தையும் அவளை துளைத்தெடுக்கவில்லை. இருந்தும் அவள் துன்புறுத்தப்படுகிறாள்.  இத்தனைக்கும் அவள் சுற்றத்தார் அவளுக்கு ஓர் நல்வாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நினைத்து இதை செய்தனர். அவர்களது அன்பு பாசத்தால் மறைக்கப்பட்டுவிட்டது அவள் கனவு. அதற்காக அன்பு பாசமே இருக்கக்கூடாதா என்றால் அது தவறு. எதிலும் அவர்களுக்கான இடைவெளியும், சுதந்திரமும் கொடுக்கப்படவேண்டும். இது ஆண்களுக்கும் பொருந்தும். வித்யாவின் மனநிலையை சற்று சிந்தித்து பார்க்கையில் , அவளுக்குள் ஒரு போராட்டமே நடந்திருக்கும்.  அவள் மீது அக்கறை கொண்ட அன்பான குடும்பம் , அக்குடும்பத்தின் மீது எந்நேரமும் குற்றம் சொல்ல காத்திருக்கும் சமூகம். இதற்கிடையில் அவளுக்கான கனவு. அதை அவள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கூட அவளுக்கு கிடைத்திராது. அவள் உணரும் முன்பே அவளுடைய கனவு நசுக்கப்பட்டிருக்கும். கருவை சிதைப்பது எவ்வளவு கொடுமையோ, அதே அளவு கனவை சிதைப்பதும் தான்.

நாம் சாருவின் கதைக்கு வருவோம். பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களே அதிகம் கொண்டவள்  சாரு. தைரியசாலி , சமூகத்தில் பெண்கள் மீது பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை உடைப்பதிலும் கூட. தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு பிரச்சனை என்றாள் முன் நிற்பதிலும் அவள் தான் முன்னோடி. அதற்காக அவள் வாங்கிய பெயர்கள் 'பஜாரி ', 'அடங்காப்பிடாரி ' போன்ற வகையறாக்களை சேர்ந்தவை. ஏன் இன்னும் சிலர் அவளை 'தே.....' என்கிற வார்த்தையில் கூட அழைப்பதுண்டு. இதையே ஒரு ஆண் செய்திருந்தால் 'வீரன்,தீரன் ' என்று போற்றப்பட்டிருப்பான். அவளைப்  போற்றிப் புகழ வேண்டாம், ஆனால் ஒரு குறைந்தபட்ச மரியாதையாவது அவளுக்கு கிடைத்திருக்கலாம். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் துடித்த சாரு, தற்கொலை செய்து கொள்கிறாள். காரணமே தெரியாத சுற்றத்தாரும் "அவ நடத்தை சரியில்ல அது அவங்க வீட்டுக்கு தெரிஞ்சுருச்சு , அதான் தற்கொலை பண்ணிகிட்டா"  என்று கிளப்பி விடுகின்றனர் . உலகின் பல கொடுமைகாரர்களுக்கு கிடைத்த இறுதி மரியாதை கூட, அவளுக்கு கிடைக்காமல் போனது யார் குற்றம்?

சாரு தன் உயிரை மட்டுமே மாய்த்துக் கொண்டாள். இங்கு இருப்பவர்கள் கலாசார சீரழிவு என்னும் வஸ்திரத்தால் அவள் பண்பை மாய்த்துவிட்டனர். எது கலாசார சீரழிவு ? ஆணுடன் பேசாதே , அவனுடன் பழகாதே என்று அவள் சமூக சிந்தனையை முடக்குவதா, இல்லை சகமனிதரை மதித்து பழகுவதா! சாருவின் ஆன்மாவும் கண்ணீர் வடித்திருக்கும் இவர்கள் அறியாமையை கண்டு.  ஒரு பெண்ணைப் பற்றி முழுதும் அறியாமலேயே அவள் பாத்திரத்தை கொலை செய்ய கதை உருவாக்குபவர்களுக்கு , அவள் நிலைமையை உணர நேரம் இருந்திருக்காது தான்.

இம்மாதிரி பல வித்யாக்களும், பல சாருக்களும் நம்மை சுற்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பெண் தெய்வங்களாக போற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சொல்லப் போனால் பிரச்சனை ஆரம்பிக்கும் இடமே, அப்படி அவர்களை பிரித்துப் பார்க்கும் போது தான். அவர்களை அவர் போக்கில் விடுங்கள், பிரச்சனைகள் சுமூகமாகும். அடுப்படி மட்டுமே அவர்களது நிரந்தர உறைவிடம் என்பது மாற வேண்டும்.

"ஒரு பொண்ணால எப்டி இத பண்ண முடியும்... "

"ஒரு பொண்ணுகிட்ட போய் இப்டி தோத்துட்டு வந்துருக்கியே... "

"ஒரு பொண்ணுக்கு என்ன இவ்ளோ ஆசை .."

"ஒரு பொண்ணு சொல்றத நான் கேக்கணுமா?"

"ஒரு பொண்ணு தானே... "

போன்ற எண்ணங்கள் ஆண்களுக்கும் ,

"நான் ஒரு பொண்ணு, எப்டி நான் போய்... "

"நான் ஒரு பொண்ணு, எப்டி என்னால முடியும்.."

"ஒரு பொண்ணு பண்ணுனா ஒத்துக்குவாங்களா .."

"நான் ஒரு பொண்ணு, மத்தவங்க சொல்றத தான் கேக்கணும் "

போன்ற எண்ணங்கள் பெண்களுக்கும் இருக்கும் வரையில் இக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவளும் அல்ல, வலிமையற்றவளும் அல்ல. நம்மால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டவள். இன்றைய வளர்ந்து வரும் நாகரிகத்தில், பெண்கள் வெளி வர ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், அதுவும் அவர்களுக்கு பிரச்சனை கொடுக்கவே ஆரம்பித்திருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களை எளிதாக அடைந்து விடலாம் என்பது சில காமுகர்களின் பார்வை. அது அனைவரின் சிந்தனை இல்லையெனினும் சமீபத்தில் 11 மாத குழந்தை கற்பழிக்கப்பட்ட செய்தி மற்றவர்களையும் கிலி அடையத்தான் செய்கிறது. இருந்தும் அதையும் உடைத்தெறிந்து வெளி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருகிறது.

ஒரு பெண் இங்கு தான் செல்ல வேண்டும் , இவ்வளவு நேரம் தான் இருக்க வேண்டும் , இவ்வளவு தான் பேச வேண்டும் , இவர்களோடு தான் பேச வேண்டும்  என்பதெல்லாம் தான் பெண்களுக்கான இலக்கணம் என்றால், அதை திருத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. பெண்களுக்கான இலக்கணம் என்பதே உடைத்தெறிக்க பட வேண்டிய ஒன்று தான். அவர்களை அவர்களாக இருக்க விடாமல் செய்யும் கருணையும் கூட கொடுமையானது தான்.

பெண்களுக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்தாலும் அதில் பலவும் சில பெண்களின் சுயநல விரோதத்தை தீர்த்துக் கொள்ளவே பயன்படுகிறது. பெண்களே! உங்களுக்கான ஆதரவுகள் பெருக துவங்கி இருக்கின்றன. அதை சரியான முறையில் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துங்கள். பாலின பாகுபாடு குறைய சில காலம் பிடிக்குமெனினும் அதற்கான ஆணிவேராக இது அமையும். ஆண், பெண் இருவருடைய ஒத்துழைப்பின்றி இது நிறைவேறாத ஆசையாகவே இருக்கும்.

"விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுகரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை அனைத்தையும் கடவுளர்க் கினிதாகச் சமைப்பராம்"

இதில் பாதி நிகழ ஆரம்பித்திருக்கிறது. மீதியும் நிகழ, பெண்மையைப் புகழ்வோம்.
அவளிடம் நான் அவ்வளவாக பேசியதில்லை. நான் தனிமையில் இருக்கும்போது அவளுடன் பேச ஓராயிரம் வார்த்தைகள் ஒத்திகை பார்த்ததுண்டு. ஆனால், அவளுடன் பேச விழையும் தருணங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் உதிர்க்க என் நா மறுக்கின்றன. அதற்கு காரணம், என்னையே அறியாமல் நான் கொண்ட நாணமா இல்லை அவள் கண்களில் நான் கண்ட பானமா என்பது எனக்கே புதிர் தான். தூக்கக் கலக்கத்திலோ ஒரு வித கிறக்கத்திலோ நான் அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவளுடன் பேசிட, அவள் மேல் நான் கொண்ட ஆசைகளை கவிதையாய் பாடிட ஓர் அசட்டுத் தைரியம் என்னை வந்து சேரும். ஆனால், அடுத்த நாளே அவளைப் பார்க்கும்போது மீண்டும் ஓர் முறை கோழையாகிறேன்.

அவள் இதழோரப் புன்னகை அவ்வப்போது தலைநீட்டி கண் சிமிட்டும். அது எனக்கானதாய் இருக்காதா என்கிற அங்கலாய்ப்பு எப்போதும் எனக்குண்டு. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த சிரிப்பு இரட்டிப்பாகும். அதைப் பார்த்து என்னையே அறியாமல் நானும் சிரித்துக் கொண்டிருப்பேன். அந்த சிரிப்பிற்கு காரணம் கேட்டால் சமாளிக்க முடியாமல் அசடு வழிவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். அப்படியொரு நிலைக்கு என்னை அடிக்கடி ஆளாக்குவதில் அவள் படுசுட்டி.


அவள் பார்க்கும் திசையில் நான் இருந்துவிட்டால் போதும், அவளைக் கவர்ந்து விட வேண்டுமென்று என் இயல்பை மீறி நான் செய்யும் கோமாளித்தனங்கள் பல. அவள் கண் விழி உருளும் சமயங்களில் நானும் உருள முற்படுகிறேன், அவள் விழிகளின் ஒளி என் மேல் நிகழ்ந்து கொண்டே இருக்க.


அவள் துப்பட்டாவும் என் சட்டையும் எப்போதாவது ஒரே வண்ணத்தில் சந்தித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றல் ஒன்று எங்களை சேர்க்க போராடி வருவதாய் நினைத்துக் கொள்வேன். அவள் தன் தோழிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அரை வினாடிக்கொரு முறை முகபாவனைகளை மாற்றிக் கொண்டே இருப்பாள். அவளை விட அப்படி என்ன சுவாரஸ்யம் அந்த உரையாடலில் இருந்து விட போகின்றது என்று நான் வியந்ததுண்டு. இருந்தும் அவளைத் தொடர்ந்து கவனிக்க நான் அச்சப்படுகிறேன். அவள் ஒவ்வொரு முகபாவனையும் என் உடல் பாகங்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கின்றன.


யாரும் கவனிக்கவில்லையென நினைத்து அவள் தன்னிலை மறந்து நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டிருப்பாள். ஒரு மழலையின் உடல்மொழி அவளிடத்தில் தெறித்துக் கொண்டிருக்கும். பஞ்சத்தில் அடிபட்ட பாமரனாய் அவளையே நான் வெறித்துக் கொண்டிருப்பேன், அவள் சிந்தவிடும் சிதறல்களேனும் எனக்கு சொந்தமாகுமா என்கிற ஏக்கத்தில்.


சுவாரஸ்யம் இல்லாத வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்போதெல்லாம் அவள் முகத்தை ஒரு மாதிரி தூக்கி வைத்துக் கொள்வாள். அதுவும் ஒரு அழகு தான் என்று இலக்கணத்தை மாற்றியமைத்தாள். அனைவரும் தாங்கி நிற்கும் எதார்த்தம் கூட, அவளிடம் சேர்கையில் கவிதையாகிறது.


அவள் யாருடனாவது ஐந்து நிமிடங்களுக்கு மேல் கைப்பேசியில் உரையாடினால் என் மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். ஒரு வித பொறாமை துளிர்விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்து விடுவேன். நேரில் பேச முடியாமல் திருட்டுத்தனமாய் அவள் முகப்புத்தகப் பக்கத்தை நோட்டமிடும் ஒரு தொடை நடுங்கியின் செய்கை வேறென்னவாக இருந்து விட முடியும்.


அவளை நான் இவ்வளவு ரசித்தபோதும், விரும்பியபோதும் அவளுடனான ஒரு இடைவெளியையே விரும்புகிறேன். அவளுடன் நெருங்கி அவளைப் புரிந்துகொள்ள முயல்கையில் உண்மையில் அவள் நான் விரும்பிய அவள் இல்லை என்கிற ஏமாற்றத்தை விட, தொலைவில் இருப்பினும் நான் ரசித்த அவளாகவே வாழ்ந்துவிட்டு போகட்டும். அவள் வாழ்க்கையில் அவளே படிக்காத ஒரு அத்தியாயமாய் இருப்பதும் ஒரு போதை தானே...!
She was there to welcome me to this world,
As a Doctor...
She was there to give me first touch of pain,
As a Nurse...
She was there to give me first touch of care,
As an Aunt...
She was there to give me first piece of Advice,
As a Grandma...
She was there to share me the only piece of chocolate,
As a Sister...
She was there to stimulate my boyish hormones,
As an Actress...
She was there to take out my first blush,
As a Crush...
She was there to give a free advice in every single decision of mine,
As a neighbourhood Aunt...
She was there to share my good and bad in the same way,
As a Friend...
She was there to make me What I am and Who I am today,
As a Mother...
She is a Woman.
She is like air everywhere around you to shape you up.
Happy Women's day..smile emoticon
PS: Some of them stated above should be in present tense and plural as well..smile emoticon


7 மணி 40 நிமிடங்கள் 33 விநாடிகள் நான் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் காலடி எடுத்து வைத்த போது...

"காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றை தேடுதே"

என்று இளையராஜா டீக்கடையில் வருடிக்கொண்டிருக்க, கீழே விழுந்த 5 ரூபாயை ஓர் முதியவர் தேடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டுகொள்ளாதவனாய் ஓர் இளைஞன் 7:30 மணி பேருந்து சென்றுவிட்டதா என்று பதில் சொல்ல இஷ்டமே இல்லாத சிலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். பேருந்து வந்தால் மட்டுமே போதும் என்பவனுக்கு, நேரத்திற்கு பேருந்தை எதிர்பார்ப்பது ஆடம்பரம் தானே!

என்றும் போல் அம்மா வைத்த ரசம் பையினுள் சிந்திவிடக்கூடாதெனும் சிந்தனையில் அலர்ட் ஆறுமுகமாய் நான் தலையை திருப்பாமல் திருப்பி, அசையாமல் அசைத்து 'கிங் பிஷர்' வருகிறதா என்று பார்த்தேன். கிங் பிஷர் என்பது நான் வழக்கமாக தவறவிடும் ஓர் பேருந்தின் பெயர். படிப்போரின் சிந்தனை சிதறிவிடக்கூடதென்பதால் இச்சிறு விளக்கம்.

ரேஷன் கடையிலிருந்து அரிசிப்பையை ஒரு பக்கம் சாய்ந்து கஷ்டப்பட்டு தூக்கி வரும் ஓர் சிறுவனை போல ஈரோட்டிலிருந்து ஒரு பேருந்து ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. நிச்சயமாக அது கிங் பிஷர் இல்லை. சாய்ந்து வந்தாலும் தள்ளாடாமல் வந்ததே காரணம். நிறுத்தத்தில் அசால்டாக நின்று கொண்டிருந்த அனைவரும் ஆயத்தமானார்கள்.

ஆயத்தமான 10 பேர் கொண்ட கும்பலை கடக்கும் போது மட்டும் வேகம் எடுத்தது அந்த ஊர்தி. நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சரியாக 100 மீட்டர் தொலைவில் நின்றது. அனைவரும் ஓட ஆரம்பித்தனர். மந்தையில் இணைந்த ஆடாக நானும் மனதிற்குள் சில ஹீரோக்களின் பின்னணி இசையை வாசித்தவாறு பேருந்தை நோக்கி ஓடினேன். ஆனால் பார்த்தவர்களுக்கு என்னமோ ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ என்று தான் தோன்றியிருக்கும். பேருந்தின் படிக்கட்டுகளை நெருங்கிய போது என்னுள் வாங்கிய மூச்சு மென்பொருள் பணி என்னை எவ்வளவு மென்மையானவனாய் மாற்றிவிட்டதென்பதை உணர்ந்தேன். ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பேருந்தில் நிற்பதற்கான இடத்தைப் பிடிக்க சில தள்ளுமுள்ளுகளை சமாளித்து ஏறினேன்.

‘உள்ள போ , உள்ள போ ! எடம் இருக்குது பார்... நடு வண்டில...’ என்று அனைவரையும் தலையணை பஞ்சாய் பேருந்தினுள் அமுத்திக் கொண்டார் நடத்துநர்.

பையை ஓர் பாதுகாப்பான (?!?) இடத்தில் வைத்த பிறகு, அருகிலிருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

காலையில் நேரம் கழித்து காபி போட்ட மனைவியை சகித்துக் கொள்ளமுடியாத ஒருவர் நாட்டின் சகிப்புத்தன்மையைப் பற்றி பேசி அருகிலிருந்தவரின் சகிப்புத்தன்மையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

“நாட்டுல எவனும் ஒழுங்கில்ல சார்.. எவனுக்கும் பொறுமையும் இல்ல.. எது பண்ணுனாலும் நொட்ட சொல்லிட்டிருக்கானுங்க”
அருகிலிருந்தவரும் ‘நீ மட்டும் இப்ப என்ன பண்ணிட்டிருக்கியாம்’ என்ற வாக்கில் மூஞ்சியை வைத்துக் கொண்டு ம்ம்ம் போட்டுக் கொண்டிருந்தார்.

அவர்களுக்கு அருகிலிருந்தவரோ நமக்கு ஏன் இந்த பாடு என்று என் அறிவுக்கு எட்டாத அரசியலையும், என் வங்கிக் கணக்குக்கு எட்டாத பொருளாதாரத்தையும் தினசரிப் பத்திரிக்கையில் அலசிக் கொண்டிருந்தார். விளையாட்டுப் பகுதி வந்தால் நானும் கொஞ்சம் அலசிக் கொள்ளலாம்  என்றிருந்த எனக்கு ஏமாற்றமே. உலகக் கோப்பையில் இந்தியா தோற்ற பிறகு, யுவராஜ் சிங் வீட்டின் மீது கல்லெறிந்து விட்டு கிரிக்கெட்டை வெறுத்தார் போல் நடிக்கும் பட்டியலில் அவரும் ஒருவராய் இருக்கலாம்.

“சார்.. கொஞ்சம் தள்ளி உக்காருங்க” என்று பின்னால் ஒரு குரல். மூவர் சீட்டில் உட்காந்திருந்த இருவரினூடே இடைவெளியை கண்டுபிடித்த குரல் அது.

“உள்ள போங்க சார்... நாங்க கருமத்தம்பட்டியில இறங்கிடுவோம்” என்றார் அந்த இருவரில் ஒருவர் காரணத்தைக் கண்டுபிடித்து பேருந்து ஏறியது போல.

“சார்.. நான் அவிநாசியிலயே இறங்கிடுவேன்“  என்றார் ஒரு வஞ்சப் புன்னகையோடு.

உட்கார்ந்திருந்தவர்களும் வேறு வழியில்லாமல் நகர்ந்தும் நகராமலும் சிறு இடம் விட்டு, தள்ளி உட்கார்ந்தனர். இவரும் சிரித்த பாவத்திற்கு உட்கார முடியாமல் உட்கார்ந்தார். நம்மை வெறுப்பேத்தியவரை கடுப்பேத்தும் ஓர் அல்ப சுகம் அலாதியானது தானே!

இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் பேருந்தின் முன்பகுதியிலிருந்து ஓர் சலசலப்பு. என்னவென்று கவனிக்கையில் அது ஓர் கம்பீரமான பெண்மணியின் குரல். ‘கம்பீரம்’ , ‘பெண்மணி’ இரண்டும் ஒரு சேர வரும்போது சொல்முரணணியாக பார்க்கப்படும் சூழலில் அப்படியொரு குரல் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் எல்லாப் பொருத்தங்களையும் கொண்டிருந்தது.

“என்னங்க... பஸ் ஸ்டாப்ல தானே நிக்கணும்... இவ்ளோ தூரம் தள்ளி நிறுத்துனா எல்லாரும் எப்படி ஏறுவாங்களாம்“ என்று ஓட்டுநரிடம் உறுமியது அந்த கம்பீரம்.

“அதெல்லாம் எதுக்கு கேக்கற. பஸ் ஏறுனியா, டிக்கெட் எடுத்தியா, வந்தியானு இருக்கணும்” என்று சம்மந்தமே இல்லாமல் ஒரு பதில்.

“ஆனா, ரூல்ஸ் படி அங்க தானே நிக்கணும். நாங்க தானே பஸ் ஏறுறோம். எங்களுக்காக தானே பஸ்” என்று நியாயமான நியாயத்தை கூறினார் அந்த பெண்மணி.

“ஓ... ரூல்ஸ் பேசறியா நீ. எனக்கு தெரிஞ்ச ரூல்ஸ் இதான்” என்று கோபத்தை காட்ட பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்.

உடனே பேருந்தின் பின்பகுதியில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துநர் இறங்கி பஞ்சாயத்து தலைவராய் முன்னால் ஏறினார்.

“என்னம்மா உனக்கு பிரச்சனை ? அதான் பஸ் ஏறிட்டல. அப்புறம் என்ன” என்று நியாயமாக பேசுவது போலவே பேசினார் நம் பஞ்சாயத்து தலைவர்.

“பஸ் எதுக்கு தள்ளி நிறுத்தறிங்க. கரக்டான எடத்துல நிக்கணும் கேட்டது தப்பா?” விட்டுக்கொடுக்காமல் நம் கதாநாயகி.

“ரூல்ஸ் எல்லாம் நீ பேசக்கூடாது. அப்புறம் எதுக்கு இதுல ஏறுன? வாய மூடிட்டு வர்றதுனா வா இல்லனா எறங்கிடு”

“நா எதுக்கு எறங்கணும். டிக்கட் எடுக்கறேன்ல”

“அப்ப பேசாம வா..: “ கிட்டதட்ட ஒரு கட்டளை அந்த பெண்மணியிடம்.

“நீ எதுக்கு ணா இது பேசறது எல்லாம் காதுல வாங்கிட்டு. நீ வண்டிய எடுணா” கெஞ்சல் ஓட்டுநரிடம் என்று வித்தியாசம் காட்டினார் நடத்துநர்.

“பேசாம வர்றதுனா வர சொல்லு” என்று வண்டியை எடுத்தார் நியாயம் தன் பக்கம் இருப்பதைப் போல பிம்பத்தை முன்னிறுத்தி.

“சரி. நா பேசல” என்றார் தன் நியாயத்திற்கு எவரும் துணை நிற்காத விரக்தியில்.

பேருந்து புறப்பட்டது.

ஒரு 200 மீட்டர் சென்றிருக்கும், மறுபடியும் மனம் பொறுக்காதவராய் “ஆனாலும் நீங்க செஞ்சது தப்பு தான்” என்றார் அந்த பெண்மணி.

“இந்த பொம்பளைய வெச்சிக்கிட்டு பஸ் ஓட்ட முடியாது யா. கருமத்த” என்று பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுவிட்டார் ஓட்டுநர் அந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல. உண்மை கோபத்தை வரவழைப்பது தான், ஆனாலும் இது அர்த்தமற்ற கோபமாக தோன்றியது.

2 நிமிடத்திற்கு எவருக்கும் எதுவும் புரியவில்லை. அதன்பிறகு, நடத்துநருடன் 10 பேர் இறங்கி ஓட்டுநரை சமாதானம் செய்ய சென்றனர் முனகிக்கொண்டே.

உடனே பேருந்தினுள் அர்ச்சனை ஆரம்பித்தது. ஓட்டுநருக்கு அல்ல அப்பெண்மணிக்கு.

“ஏம்மா... அவன் அவன் வேலைக்கு போக வேண்டாமா? நீ பாட்டுக்கு டிரைவர கடுப்பேத்திவிட்டுட்ட”

“ஒரு பொம்பளைக்கு அப்படி என்ன திமிரு ?”

“ஒரு பொம்பள எப்படி ரூல்ஸ் பேசலாம் ?”

“ஆனாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆகாது”

என ஆங்காங்கே தன் வீட்டு பெண்மணியை திட்டமுடியாத கையாலாகாதனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் சில ஆண்கள்.

“இதில் யார் மீது தவறு ? அந்த பெண் கேட்டது நியாயம் தானே” என்ற குழப்பத்தில் நான். பெண்மைக்கும் பெண்ணுக்கும் எதிரான குரல்கள் வரும்போது காரண காரணிகளை ஆராய்வது முட்டாள்தனம் தான்.

ஆனால், அப்பெண்ணுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட ஒலிக்கவில்லை என்பது தான் வருத்தம். அது அவர் பெண் என்பதாலா? அல்லது அவர் கேட்டது நியாயம் என்பதாலா?
அவரும் மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் அமைதியானார்.

நடத்துநரும் அந்த 10 பேரும் ஏதோ அநியாயத்தைக் கண்டு பொங்கியவரை ஆசுவாசப்படுத்தியது போல மகிழ்ச்சியுடன் அழைத்து வந்தனர். பேருந்தும் புறப்பட்டது ஓட்டுநரின் ஏளன பார்வையோடு.

அதைப் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. பாவம்! அப்பெண்மணி எங்கு செல்ல எண்ணி வந்தாரோ அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கினார். இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது சரியாக இருக்கும்.

இறங்கிய பின், பேருந்தையும் பேருந்தில் இருந்தவர்களையும் ஒரு பார்வை பார்த்தார். அப்பார்வை “உங்களுக்காக பேசியது என் குற்றம் தான்” என்று கோபத்தையும் அழுகையையும் கலந்து கூறியது. இப்படி பல பார்வைகளை உண்டாக்கிய குருடர்களுள் ஒருவனாய் கூனிக் குறுகிப் போனேன் நான்.